டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில், அக்டோபர் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கடந்த 2008-ஆம் ஆண்டு முறைகேடுகள் நடந்ததாக கூறி, கடந்த 2009-ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது. அதன்படி துவங்கிய விசாரணையில், இந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மற்றும் 3 நிறுவனங்கள் என 17 பேருக்கு எதிரான இந்த வழக்கு, முதலில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்து வந்தது. அதன்பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீதிபதி ஓபி ஷைனி தலைமையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றம் சாட்டப்பட்டோர் மீது, குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசு பதவியை தவறாக பயன்படுத்துதல், லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட பல்வேறுபிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. தீர்ப்பு தயாராகாததால் கால அவகாசம் தேவைப்படுகிறது என நீதிபதி ஷைனி விளக்கமளித்தார்.
இதையடுத்து, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான இந்த வழக்கு மீதான தீர்ப்பு தேதி, செப்டம்பர் மாதம் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அக்.25ல் தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.