டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்தும், அதுதொடர்பான பிற வழக்குகளின் விசாரணையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
தமிழக சட்டமன்றத்தில் இருந்து டி.டி.வி. தினகரன் ஆதரவு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. திமுக உறுப்பினர்கள் 21 பேர் மீதான அவை உரிமை குழு நோட்டீஸ் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு, துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, டிடிவி. ஆதரவு அதிமுக சட்டமன்ற வெற்றிவேல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த அனைத்து மனுக்கள் உள்ளிட்ட எட்டு வழக்குகள், தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் முன்பு இன்று மீண்டும் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, டி.டி.வி. தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிசேக் மானு சிங்வி ஆஜராகி, இரண்டாவது நாளாக தனது வாதத்தை முன் வைத்து வாதாடினார்.
மாலை 5 மணி : வழக்கு வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மாலை 04:20 - டிடிவி எம்.எல் ஏ.க்கள் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதம் - "எடப்பாடி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்தது என பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டார். முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்றனர். கட்சியில் இருந்து விலகவில்லை. எதிர்க்கட்சி தலைவருடன் சேர்ந்து செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரை சந்தித்து புகார் அளித்த பிறகே ஸ்டாலின் கவர்னரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க கோரிக்கை விடுத்தார்" என்றார்.
பிற்பகல் 13:40 - அபிஷேக் சிங்வி தனது வாதத்தில், "எந்த விதிகளையும் பின்பற்றமாலும், உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகவும் தகுதி நீக்க உத்தரவு உள்ளது. மனுதாரர்களிடம் உரிய விளக்கம் அளிக்க கால அவகாசம் கொடுக்க வில்லை. இவர்களை தகுதி நீக்கம் செய்தது இயற்கை நீதிக்கு எதிரானது.
கட்சியே மாறாதபோது, மனுதாரர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய முடியாது. முதல்வருக்கு எதிராக புகார் கொடுத்த ஒரே காரணத்துக்காக இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது தவறு. இவர்களின் உரிமை மறுக்கப்பட்டது, இயற்கை நீதிக்கு எதிரானது.
ஹரியானா மாநிலத்தில், தகுதி நீக்கத்தில் 5 நாட்களும், கர்நாடகாவில் 3 நாட்களும் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இங்கே போதிய அவகாசம் கொடுக்கப்படவில்லை. ஆளுனரிடம் மனு கொடுத்த அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் ஜக்கையன் எம்.எல்.ஏ. அணி மாறியவுடன் அவர் மீதான நடவடிக்கை முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது.
உள்கட்சி ஜனநாயகத்தை 18 எம்.எல்.ஏ.க்களும் எப்படி மீறினார்கள்? இதற்கு, பேரவை சார்பில் விளக்கம் தரப்படவில்லை. முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறுவது கட்சித்தாவலா?" என தனது வாதத்தை முன் வைத்துள்ளார்.
தொடர்ந்து வாதம் நடைபெறுகின்றது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.