இந்தூரில் நேற்று(செப்.,24) நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரைக் கைப்பற்றியது. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 294 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி, 47.5-வது ஓவரில் இலக்கை எட்டியது.
தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, ரஹானே சிறப்பாக விளையாடி முறையே 71, 70 ரன்கள் எடுத்தனர். அதன்பின் கேப்டன் விராட் கோலி 28 ரன்னிலும், கேதர் ஜாதவ் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியாவின் கை சற்று ஓங்கியது.
ஆனால், ஓங்கிய கையை அப்படியே ஒடுக்கி, ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கனவிற்கு முட்டுக் கட்டை போட்டார் ஹர்திக் பாண்ட்யா. இறுதிக் கட்டத்தில் 72 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு எந்தவித தடங்கலும் இல்லாமல் கொண்டுச் சென்றார். இதில் 4 சிக்ஸர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். குறிப்பாக, ஆஸி., சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் பந்துவீச்சை சிதறடித்தார் ஹர்திக். நான்கு சிக்சர்களையும் அகர் ஓவரில் விளாசினார்.
இறுதியில், மனீஷ் பாண்டேவும் ஹர்திக் பாண்ட்யாவிற்கு பக்கபலமாக நிற்க, இந்திய அணி 3-0 என தொடரைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை பாண்ட்யா வென்றார்.
போட்டி முடிந்த பின், வீரர்கள் ஓய்வு அறையில், இப்போட்டி குறித்து பாண்ட்யாவிடம் கேப்டன் விராட் கோலி விளையாட்டாக எடுத்த நேர்காணல் வீடியோ சமூக தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அந்த ஜாலி வீடியோ இதோ,
Ladies and gentlemen, here is the man of the moment @hardikpandya7(Also @klrahul11 at the back)????????????
Great win, series clinched???? #NumberOne☝️ pic.twitter.com/umyvk0IW7x
— Virat Kohli (@imVkohli) 24 September 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.