நியூசிலாந்தை சேர்ந்த தடகள வீரர் ஜேக் ராபர்ட்சன், விளையாட்டு மைதானத்தில் திரளான பார்வையாளர்களுக்கு மத்தியில், தனது தோழியின் முன் மண்டியிட்டு காதலை வெளிப்படுத்திய சம்பவம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
நியூசிலாந்தை சேர்ந்த தடகள வீரர் ஜேக் ராபர்ட்சன் வடக்கு இங்கிலாந்தில் நடைபெற்ற தடகள போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். ஆனால், முதலிடத்தை பெற்ற வீரரை விட இவருக்கு கைதட்டலும், வாழ்த்துகளும் குவிந்தன. ஏனென்றால், தன் இலக்கை அடைந்தவுடனேயே கென்யாவை சேர்ந்த தன் தோழி மெக்டாலின் மசாயிடம் தன் காதலை திரளான பார்வையாளர்கள் மத்தியில் காதலை வெளிப்படுத்தினார்.
மெக்டாலினும் ஒரு தடங்கள வீராங்கனை. அதே போட்டியில் பெண்கள் தனிப்பிரிவில் நான்காவது இடத்தை பிடித்தார் மெக்டாலின். அதன்பின், ஜேக் ராபர்ட்சன் தனது இலக்கை அடைந்தவுடன் அங்கு மெக்டாலின் அழைத்து வரப்பட்டார். அதன்பின், ஜேக் ராபர்ட்சன், தன் தோழியின் முன்பு மண்டியிட்டு அவரது கையை பிடித்து காதலை வெளிப்படுத்தினார். “என்னை திருமணம் செய்துகொள்வாயா?”, எனவும் அவர் அனைவரது முன்னிலையில் கேட்டார். அதற்கு மெக்டாலினும் அவரது காதலை ஏற்றுக்கொண்டு ‘ஆம்’ என தெரிவித்தார்.
இதைப்பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். “போட்டியின்போது கடைசி மைலில் இந்த எண்ணம் தோன்றியது. இந்த நேரம் சரியாக இருக்கும் என நினைத்தேன்.”, என ஜேக் ராபர்ட்சன் தெரிவித்தார்.