இந்திய கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருபவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இவரை சேர்க்கும் இந்திய அணி நிர்வாகம், மற்ற இரண்டு வடிவிலான கிரிக்கெட்டில் இவரை இன்னும் டீலில் விடுகிறது.
இதற்கு நேரடியாக இல்லாமல், மறைமுகமாக இந்திய தலைமை கோச் சொல்லும் காரணம் 'இந்திய அணிக்கு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் தேவை' என்பதே. மேலும், 'நல்லவேளையாக ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு கிடைத்துள்ளனர்' என்று ரவி சாஸ்திரி கூறியிருப்பது அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் நிராகரிப்பிற்கு காரணமாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ரவிச்சந்திரன் அஷ்வினை ட்விட்டரில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை எட்டு மில்லியனை கடந்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், அஷ்வின் தனது ட்விட்டரில் ரஜினியின் 'பாட்ஷா' படத்தில் உள்ள 'ரா...ரா... ராமையா' பாடலின் டப்ஸ்மேஷை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, "புகழ், விமர்சனம், வெற்றி, தோல்வி என எல்லாவற்றையும் நான் கிரிக்கெட்டில் பெற்றுள்ளேன். இது என்னை கிரிக்கெட்டில் மேலும் வலிமையாக்கியது. இந்த உண்மை இப்போது என ட்விட்டரிலும் எதிரொலித்துள்ளது. எனது ட்விட்டர் ஃபாலோயர்களின் எண்ணிக்கை இப்போது எட்டு மில்லியனைக் கடந்துள்ளது. அனைவருக்கும் நன்றி" என்றும் அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.