தங்களது இளம் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எலக்ட்ரானிக் ஸ்போர்ட்ஸ்-ஐ ஊக்குவிக்க உள்ளதாக ஒலிம்பிக் சேனலின் நிர்வாக இயக்குனர் இயானிஸ் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு ரியோ டி ஜெனீரியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர் டிஜிட்டல் ஒலிம்பிக் சேனல் 450 மில்லியன்ஸ் டாலர் மதிப்பில் தொடங்கப்பட்டது. சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இதனை ஆரம்பித்தது. ஒலிம்பிக் போட்டிகள் குறித்த ஆர்வத்தை நிலைநாட்டவும், இளம் தலைமுறையினரை அதிகம் இதன் நோக்கி இழுக்கவும் இந்த டிஜிட்டல் சேனல் தொடங்கப்பட்டது.
இ-ஸ்போர்ட்ஸில் 250 மில்லியன் வீரர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இயானிஸ் கூறுகையில், "இ-ஸ்போர்ட்ஸுக்கான இடத்தை ஆழமாக விரிவாக்கம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். எங்களிடம் இப்போது முக்கிய பார்ட்னராக விளங்கும் 'இன்டெல் கார்ப்', இந்த விளையாட்டை புதிய பரிமாணத்தில், ஸ்மார்ட்டாக உருவாக்க உதவுகின்றனர்" என்றார்.
கடந்த நவம்பரில் இ-ஸ்போர்ட் ஒரு விளையாட்டாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும், வளரும் விளையாட்டாகவும் இதை அறிவித்தது.
இதன் மார்கெட், வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் இந்த விளையாட்டில், தொழில் முறை அணிகளும் பங்கேற்கின்றன. அதுமட்டுமின்றி, மில்லியன் கணக்கில் இளம் தலைமுறையினர் பார்வையாளர்களாக கிடைத்துள்ளனர்.
ஒலிம்பிக் டிஜிட்டல் சேனலில் 85 சதவிகித பாலோயர்கள் 35 வயதுக்கும் கீழ் உள்ளவர்களாம். அதாவது, சராசரியாக ஒலிம்பிக் போட்டிகளை பாலோ செய்யும் ரசிகர்களின் வயதை விட 10 ஆண்டுகள் இளமையானவர்களாம்.
2020ல் ஜப்பானில் நடக்கவுள்ள சம்மர் ஒலிம்பிக் போட்டிகளிலும், 2026ல் பெய்ஜிங்கில் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கிலும் இ-ஸ்போர்ட்ஸ் பங்குபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.