காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அதை அமைக்காமல் தாமதப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு தாக்கல் செய்த மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை (ஏப்ரல் 9) உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வரவுள்ளது.
இது ஒருபுறமிருக்க, நேற்று தொடங்கியுள்ளது ஐபிஎல் தொடர். சென்னையில் வரும் 10ம் தேதி, கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி விளையாட உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டது. ஆனால், சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், சென்னையில் நடைபெறவிருந்த போட்டிகளை, கேரள மாநிலத்திற்கு மாற்ற பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. சமூக தளங்களில் இந்த தகவல் வேகமாக பரவியது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இந்தத் தகவலை மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் வரும் 10ம் தேதி நடக்கும் போட்டியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. போட்டி திட்டமிட்டவாறு நடக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.