நிடாஹஸ் டிராபி எனப்படும் முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில், இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
கொழும்புவில் இரவு ஏழு மணிக்கு தொடங்க வேண்டிய இந்தப் போட்டி, மழையால் பாதிக்கப்பட்டதால், 8.20 மணிக்கு தொடங்கியது. இதனால், 19 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது.
இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, மழை அச்சுறுத்தல் இருப்பதால், பீல்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை தொடக்க வீரர்கள் குணதிலகா 17 ரன்னில் வெளியேற, குஷல் மெண்டிஸ் 38 பந்தில் 55 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களில் உபுல் தரங்கா மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். இதனால், நிர்ணயிக்கப்பட்ட 19 ஓவர்களில் அந்த அணி, 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.
இந்தியா தரப்பில், 4 ஓவர்கள் வீசிய ஷர்துள் தாகுர் 27 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா 11 ரன்னிலும், தவான் 8 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரெய்னா 27 ரன்னில் அவுட்டானார். ஆனால், அதன் பின் மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. மனீஷ் 42 ரன்களும், தினேஷ் கார்த்திக் 39 ரன்களும் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தனர். இதனால், இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.
இதன் மூலம் தனது மூன்றாவது போட்டியில் விளையாடிய இந்தியா, இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றுள்ளது.