ஒடிசாவில் நடைபெறும் உலக ஹாக்கி லீக் போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் பெல்ஜியத்தை வீழ்த்திய இந்திய அணி, அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடந்து வருகிறது. ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இதில் பங்கேற்கின்றன. நேற்று (டிசம்பர் 6) நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியா - பெல்ஜியம் அணிகள் மோதின.
முதல் 30 நிமிட ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 31-வது நிமிடம் இந்தியாவின் குர்ஜந்த் சிங் முதல் கோல் அடித்தார். அதன்பின் 35-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் 2-வது கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பின்னர் பெல்ஜியம் அணி விளையாடியது. பெல்ஜியம் அணியின் லைபார்ட் லாயிக் 39-வது மற்றும் 46-வது நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமனானது. 46-வது நிமிடத்தில் இந்தியாவின் ருபிந்தர் பால் சிங் ஒரு கோல் அடித்தார். அடுத்ததாக 53-வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் கியூஸ்டர்ஸ் அமவுரி ஒரு கோல் அடித்தார். அதன்பின் மேற்கொண்டு எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 3-3 என சமனில் முடிந்தது.
இது நாக்-அவுட் சுற்று என்பதால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட்-அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. வலிமையான பெல்ஜியம் அணியை இந்தியா வீழ்த்தியது முக்கியத்துவம் பெறுகிறது.
மற்றொரு காலிறுதி போட்டியில் ஸ்பெயின் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அறையிறுதி போட்டிக்கு முன்னேறியது.