புரோ கபடி லீக் தொடரில், நாக்பூரின் மான்கபூர் உள்அரங்கத்தில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில், குஜராத் ஃபாரச்யூன்ஜெயன்ட்ஸ் அணியும், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் மோதின. இதில் ஹரியானா அணி 32 - 20 எனும் புள்ளிக் கணக்கில் வென்றது.
ஹரியானா வீரர் விகாஸ் கன்டோலா 4 முறை வெற்றிகரமாக ரெய்டு சென்று அணிக்காக 6 புள்ளிகள் பெற்றுத் தந்தார்.
இரு அணிகளையும் பொறுத்தவரை, ரெய்டு செல்வதில் சம பலமாகவே திகழ்ந்தன. இரு அணிகளும் தலா 10 ரெய்டு புள்ளிகளைப் பெற்றது. ஆனால், டேக்கில் பாயிண்ட்களை பொறுத்தவரை, ஹரியானா 16 புள்ளிகளை குவித்தது. குஜராத் வெறும் 9 புள்ளிகள் மட்டுமே பெற்றது.
இந்தத் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள ஹரியானா அணிக்கு, இதுதான் முதல் வெற்றியாகும். 3 போட்டிகளில் ஆடியுள்ள குஜராத் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.
இதே அரங்கத்தில் நடந்த மற்றொரு போட்டியில், 'தமிழ் தலைவாஸ்' அணியை முதல் போட்டியில் தோற்கடித்த தெலுகு டைட்டன்ஸ் அணியும், தமிழ் தலைவாஸ் அணியை இரண்டாவது முறைய தோல்வியடைய வைத்த பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின.
இதில், இரு அணிகளும் தலா 21 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் டை ஆனது. தெலுகு டைட்டன்ஸ் அணியின் கேப்டனும், ஃபைவ் ஸ்டார் ரைடர் என பெயர் பெற்றவருமான ராகுல் சௌத்ரி 8 ரெய்டு புள்ளிகளைக் குவித்தார்.
இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள தெலுகு அணி, ஒரேயொரு போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. ஐந்து போட்டிகளில் தோற்றுள்ளது. 5 போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூரு அணி இரண்டில் வெற்றிப் பெற்றுள்ளது.