21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற மகளிருக்கான 50மீ ரைபிள் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சவாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே போட்டியில், இந்தியாவின் அஞ்சம் மவுத்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோன்று, ஆடவருக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா தங்கம் வென்று அசத்தினார். இதன்மூலம், 15 வயதே ஆன அனிஷ் பன்வாலா, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக பதக்கம் வெல்லும் இளம் வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இது இந்தியாவுக்கு கிடைத்த 16-வது தங்கம் ஆகும்.
இதன்மூலம் 16 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது.
மேலும், இந்திய தடகள விளையாட்டு வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்பான் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவர்கள் இருவரும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக காமன்வெல்த் நிர்வாகம் அறிவித்துள்ளது. விளையாட்டு கிராமத்தில் இருந்தும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.