மௌல் ஸ்ரீசேத், இந்தியன் எக்ஸ்பிரஸ்:
பண மதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஓராண்டாகிவிட்டது. ஜி.எஸ்.டி. நடைமுறைப்படுத்தப்பட்டு 4 மாதங்களாகிவிட்டது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் வணிகர்கள் பெர்மளவில் சில்லறைகள் சேர்வதால் சந்திக்கும் மிகப்பெரும் இன்னலை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பதிவு செய்திருக்கிறது.
"ரூ.100 மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் எவ்வளவு எடை இருக்கும்னு உங்களுக்கு தெரியுமா?", என கேட்கிறார் இக்லக் மிர்சா. "770 கிராம்."
சிறியளவில் பிளாஸ்டிக் பொருட்களை மொத்த விற்பனை செய்துவருபவர் மிர்சா. அவர், இப்படிப்பட்ட "770 கிராம்" எடைகொண்ட நாணயங்களை அதிகளவில் கொண்டிருக்கிறார், சாக்குகள் நிறைய. அதேபோல், ரூ.500 மதிப்புடைய 5 ரூபாய் நாணய முடிச்சுகளையும் தனித்தனியே வைத்திருக்கிறார். இப்படி, தனித்தனியே நாணயங்களை கட்டிவைத்திருப்பது மிர்சாவுக்கு வரவு, செலவு கணக்குகளை பார்க்க எளிதாக உள்ளது, தன் நாள் முழுவதையும் நாணயங்களை எண்ணுவதிலேயே செலவிட்டாலும். அவை மொத்தமாக ரூ.1.4 லட்சமாக இருக்கலாம் என்கிறார் மிர்சா.
மிர்சாவைபோன்று சிறு வணிகர்கள் 22 பேர் மீது, கடந்த அக்டோபர் மாதம் 12-ஆம் தேதி, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 505 (பொது அமைதியை குலைப்பது) மற்றும் உத்தரபிரதேச சிறப்பு அதிகார சட்டப்பிரிவு 153-ன் (கலகத்தை ஏற்படுத்தும் வகையில் தூண்டுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்தது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட இந்த சில்லறை பிரச்சனையால், பிரதமர் நரேந்திரமோடியை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்-உடன் ஒப்பிட்டு சுவரொட்டி ஒட்டியதால், அவர்கள்மீது மேற்கண்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த, சுவரொட்டியை ஒட்டிய பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்த சுவரொட்டியில் இடம்பெற்றிருந்த ராஜூ கண்ணா என்பவர் தற்போது தலைமறைவாக உள்ளார். தனக்கு கிம் ஜாங் குறித்து பெரிதாக ஒன்றும் தெரியாது என ஒப்புக்கொள்ளும் ராஜூ கண்ணா, தொலைக்காட்சிகளில் அவர் வடகொரியாவின் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று சொல்வதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார். அவருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டியதை தான் தவறாக கருதவில்லை என்றும் சொல்கிறார். கான்பூர் மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் திண்பண்டங்களை மொத்தமாக விற்பனை செய்துவரும் ராஜூ கண்ணா, கான்பூரில் உள்ள வணிகர்கள் தாங்கள் சந்தித்துவரும் சில்லறை பிரச்சனை குறித்து "யாரும் கண்டுகொள்வதில்லை", என கூறுகிறார். "அதனால், இப்படி சுவரொட்டி ஒட்டலாம் என நினைத்து செய்தோம். ஆனால், எங்கள் மீது வழக்கு போட்டனர்."
கான்பூர் மகாநகர் மாநகராட்சி சங்கம் மற்றும் அகில் பாரதிய உத்யோக் வியாபர் மண்டலின் கான்பூர் யூனிட், இந்த வணிகர்களிடம் ரூ.200 கோடி மதிப்புள்ள நாணயங்கள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளது.
பணமதிப்பு நீக்கத்தையடுத்து, பலரும் தங்களிடம் உள்ள சில்லறைகளை வங்கிகளிடம் ஒப்படைத்து ரூபாய் நோட்டுகளாக மாற்றினர். ஆனால், கான்பூர் வணிகர்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால், வாடிக்கையாளர்களிடமிருந்து சில்லறையாகவே பணத்தை பெற்றுக்கொண்டனர். ஆனால், ஜி.எஸ்.டி நடைமுறைக்கு பின்பு பிரச்சனை பெரிதானது. ஏனெனில், பெரும் தொகையை ஆர்.டி.ஜி.எஸ். பணபரிமாற்ற முறை அல்லது காசோலை மூலமாகத்தான் பரிமாற்றம் செய்ய முடியும் என்ற நிலைமை உருவானது. அதனால், வணிகர்களிடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாணயங்கள் பெருகின.
ஆர்.பி.ஐ. அறிவிப்பின்படி, 1,000 ரூபாய் மதிப்பிலான நாணயங்களை மட்டுமே ஒருமுறைக்கு மாற்றிக்கொள்ள முடியும் என்பதை வங்கிகள் பின்பற்றி வருகின்றன. இதனால், தன்னிடம் உள்ள 2 லட்சம் மதிப்பிலான நாணயங்களை மாற்ற ஒவ்வொரு முறையும் வங்கிகளில் வரிசையில் நிற்பது சிரமம் என்கிறார் ராஜூ கண்ணா. "இதே நிலைமை நீடித்தால், வணிகர்கள் தங்களின் நாணயங்களுடன் ஆர்.பி.ஐ. முன்பு அமர்ந்திருப்பதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்", என எச்சரிக்கிறார் ராஜூ.
நான்கு குழந்தைகளுக்கு தந்தையான ராஜூ கண்ணா, வங்கிகளில் ரூ.2 நாணயங்களை மாற்ற 20 % பரிமாற்ற கட்டணமும், ரூ.5 நாணயங்களை மாற்ற 12 சதவீத கட்டணமும், ரூ.10 நாணயங்களை மாற்ற 8 சதவீத கட்டணமும், எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி வசூலிக்கப்படுவதாக கூறுகிறார். "நாங்கள் ரூ.4 லட்சத்துக்கு நாணயங்களை மாற்ற வேண்டும் என்றால், பரிமாற்றத்தின் முடிவில் நாங்கள் ரூ.1 லட்சத்தை கட்டணமாக செலுத்தியிருப்போம்."
ராஜூ கண்ணா உட்பட 21 வணிகர்கள் மீதான வழக்கு குறித்து, கோவிந்த் நகர் பகுதியின் வட்டார அதிகாரி பிரசாந்த் துபேயிடம் கேட்டபோது, "விசாரணை நடைபெற்று வருகிறது", என கூறினார்.
அவர்கள் ஒட்டிய சுவரொட்டியில், 'மோடிஜி உங்கள் மனதிலிருந்து சொல்லுங்கள் (மான் கி பாத்), நாங்கள் இந்த நாணயங்களை எங்கு எடுத்து செல்வது', 'வங்கியும் எடுத்துக்கொள்ளாது, பிச்சைக்காரர்களும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், வணிகர்கள்தான் எடுத்துக்கொள்வார்கள்', என்பன போன்ற வரிகள் இடம்பெற்றிருந்தன.
அந்த போஸ்டரில், 'நாணயங்களுக்கான அவசரநிலை', என்ற வரியும் அச்சடிக்கப்பட்டிருந்தது.
நிகில் குப்தா, 40:
திண்பண்டத் தொழில் செய்துவருபவர் நிகில் குப்தா. கான்பூர் திண்பண்ட தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார்.
இவரிடம் உள்ள நாணயங்களின் மதிப்பு: ரூ.1.5 லட்சம்
கான்பூர் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள மார்க்கெட்டில் வணிகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே நாணய பரிமாற்றம் சூடாக நடந்துகொண்டிருக்கிறது. இதை, மார்க்கெட்டில் உள்ள மற்றவர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு அறைகள் உள்ள அவருடைய வீட்டில் சில்லறைகளை சேர்த்து வைக்க மட்டும் அலமாரிகளை ஒதுக்கியிருக்கிறார் நிகில். தொழிலையும் வீட்டிலிருந்துதான் மேற்கொள்கிறார்.
அவருடன் உள்ள சில்லறைகளின் மதிப்பு "ரூ. 1.5 லட்சம்". அதில் "ரூ.60,000 ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களாக உள்ளது.
20 ஆண்டுகளாக இந்த தொழிலில் உள்ள நிகில், இந்த மாதிரியான மோசமான நிலையை சந்தித்ததில்லை என்கிறார். "பண மதிப்பிழப்பின்போது, இந்த கிராமங்களில் உள்ள வங்கிகள் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக சில்லறையாகத்தான் தந்தன. மார்க்கெட்டுகளிலும் மக்கள் நாணயங்களைத்தான் தருகின்றனர்", நிகில்.
நிகிலிடம் திண்பண்டங்களை மற்ற கிராமங்கள், 5-6 மாவட்டங்களில் உள்ளவர்கள் திண்பண்டங்களை மொத்தமாக வாங்கி செல்பவர்களே வாடிக்கையாளர்களாக உள்ளனர். கான்பூருக்கு வந்து சரக்குகளை அவர்கள் வாங்கி செல்வார்கள். இல்லையென்றால், ஏஜெண்டுகள் சரக்குகளை பெற்று, வாடிக்கையாளர்களிடம் நேரடியாக சென்று விநியோகிப்பார்கள். "நான் அவர்களை குறை சொல்ல முடியாது. மிட்டாய்களுக்கும், பிஸ்கெட்டுகளுக்கும் அவர்களுக்கு சில்லறைகளைத்தான் மக்கள் தருவார்கள்", என்கிறார் நிகில்.
அவரை பொறுத்தவரை முதல் சில மாதங்கள் பிரச்சனை இல்லை. நிகிலும் நாணயங்கள் மூலமே பரிவர்த்தனைகளை மேற்கொண்டார். பணியாளர்கள், ஏஜெண்டுகளுக்கான சம்பளத்தையும் சில்லறையாகவே வழங்கினார். "இந்தோர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சரக்குகளை வாங்குதல் போன்ற பெரியளவிலான பரிவர்த்தனைகளிலும் 25% பணத்தை நாணயங்களாகவே செலுத்துவோம்."
ஆனால், நாட்கள் செல்ல செல்ல ரூ.50,000 வரை சில்லறையாகவே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கும் நிகில், ஜி.எஸ்.டி.க்குப் பிறகு ரூ.1,000க்கு மேல் சில்லறைகளை பலரும் எங்களிடமிருந்து வாங்குவதில்லை. "இப்போதெல்லாம் ரூ.10,000க்கும் மேல் அதிகமாக செலுத்த வேண்டியிருந்தால், உற்பத்தியாளர்கள் காசோலையாக கேட்கின்றனர். அதுமட்டுமல்லாமல், நம்மாலும் ரூ.10,000க்கும் மேல் சில்லறையாக செலுத்த முடியாது", என்கிறார் நிகில்.
மார்க்கெட்டில் நாணயங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்ற செய்தி பரவ ஆரம்பிக்க, பணியாளர்களும் நாணயங்களை பெற மறுத்தனர் என நிகில் கூறுகிறார்.
"சில நாட்களுக்கு முன்பு, காய்கறி வாங்கும்போது சில்லறை வாங்க மறுப்பதாக என் மனைவி கூறினார்", என்று கூறுகிறார் நிகில்.
தன் மாமியாருடன் நாணயங்களை எண்ணிக்கொண்டிருக்கிரும் பபிதா, நாணயங்களை நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கெஞ்சி கெஞ்சி மாற்ற வேண்டிய நிலை உள்ளது என்கிறார். "ரூபாய் நோட்டுகளை பலரால் இப்போதெல்லாம் பார்க்கவே முடிவதில்லை", என்றும் சொல்கிறார்.
"பால்காரர், காய்கறி விற்பவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் எல்லோருமே நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.".
நாணயங்களை மாற்ற பல மாற்று வழிகளை கையாண்டிருக்கிறார் நிகில். "பெட்ரோல் பங்க், ரயில் நிலையங்கள்...". ரிசர்வ் வங்கி இதில் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று கூறும் நிகில், "எங்களுக்கு உடனடியாக உதவி தேவை. எங்களுக்கென தனியாக வங்கிகளில் கவுண்டர்களாவது திறக்க வேண்டும்.
கான்பூரில் உள்ள மூத்த வங்கி அதிகாரி ஒருவர் இந்த பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்கிறார். "நாங்கள் நாணயங்கள் வாங்காமல் மறுக்கவில்லை. வணிகர்களை தவிர்க்கவும் முடியாது. ஆனால், ஒருமுறைக்கு ரூ.1,000 மதிப்பில் மட்டுமே நாணயங்களை மாற்றிக்கொள்ள முடியும் என மட்டுமே கட்டுப்பாடு விதித்துள்ளோம்."
மாநில நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வாலும் இந்த பிரச்சனை நிலவுவது குறித்து தெரியும் என்கிறார். "மிர்சாபூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளும்போது இந்த பிரச்சனையை நானே நேரடியாக கண்டேன். இதுகுறித்து, முதலமைச்சரிடமும் கூறியுள்ளேன். எல்லா இடங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது. எல்லா வங்கிகளிலும் உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி பேசியிருக்கிறேன். நாணயங்களை வாங்கிக்கொள்ள அவர்கள் உத்தரவாதம் அளித்திருக்கின்றனர். இதுபற்றி, ரிசர்வ் வங்கியும், அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது."
நிதித்துறை அமைச்சகத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பிரிவில் பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர், மத்திய அரசும் இதில் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கிறார். "வங்கிகள் நாணயங்களை வாங்காமல் இருக்கக்கூடாது. ரூ.10 நாணயங்களையும் வாங்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
இந்த பிரச்சனைகள் குறித்து ரிசர்வ் வங்கிக்கு சண்டே எக்ஸ்பிரஸ் சில கேள்விகளை அனுப்பியது. ஆனால், இதுவரை எந்த பதிலும் ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை.
இக்லக் மிர்சா, 37
பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனையாளர்
நாணயங்களின் மதிப்பு: ரூ.1.4 லட்சம்
நாணயங்களை மாற்றுவதில் ஒருவரிடம் சண்டைபோட்டு இப்போதுதான் வந்திருக்கிறார் மிர்சா. இவரது கடைக்கு அருகிலிருக்கும் கடை ஒன்றில் வாடிக்கையாளர் நாணயங்களைத்தான் தருவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார். அந்த கடைக்காரர் 10 ரூபாய்க்கும் குறைவான நாணயங்களை வாங்க மாட்டேன் எனக்கூறினார். இறுதியில், இந்த பிரச்சனையில் தலையிட்ட மிர்சா, "கடைசியில் பாதித்தொகை ரூ.10 நாணயங்களாகவும், மீதத்தொகையை காசோலையாகவும் செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தமானது.", என கூறுகிறார்.
"இந்திய ரூபாய் நோட்டுகள் இந்தியாவிலேயே செல்லாததாகிவிட்டது.", என்கிறார்.
"நாணயங்களுக்கு எடை போட்டுத்தான் அதை தனியே எடுத்து வைப்போம்", என்று கூறும் மிர்சா, "ரூ.1,000 மதிப்புடைய 10 ரூபாய் நாணயங்கள் 770 கிராம் இருக்கும். ஆனால், இந்த மாதிரியான கணக்கு ரூ.5 நாணயங்களுக்கு அவ்வளவாக சரிவராது, ஏனென்றால் அவை வித்தியாசமான வடிவத்திலும் எடையிலும் வருகிறது. அதனால், 500 ரூபாய் மதிப்புடைய 5 ரூபாய் நாணயங்களை சிறு கட்டுகளாக்கி எடுத்துவைப்போம். ரூ.1, ரூ.2 நாணயங்களை என்ண மாட்டோம்.", எனவும் கூறுகிறார்.
நாணயங்களை வாங்கிக்கொள்ள சம்மதிப்பவர்களுக்கு எளிமையாக இந்த நாணய கட்டுகளை கொடுப்பதற்கு, எடை போட்டு எடுத்துவைக்கும் முறை உதவியாக உள்ளது. "
பணத்திற்காக இவ்வளவு பிரச்சனைகள் ஏற்பட்டபோது, மிர்சா தன் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்தார். நாணயங்களிடமிருந்து தப்பிக்க பல வழிகளை கையாள்கிறார் மிர்சா. "மின்கட்டணம், ரயில் டிக்கெட்டுகள், சொல்லப்போனால் என் இரண்டு குழந்தைகளின் பள்ளி கட்டணத்தையும் நாணயங்களாகத்தான் செலுத்தினேன். இப்போது, யாரும் நாணயங்களை வாங்குவதில்லை. சில வாரங்களுக்கு முன்பு, பெட்ரோல் பங்க் ஒன்றில், நாணயங்களை வாங்குவதில்லை என போஸ்டர் ஒட்டியது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற போஸ்டர் சர்ச்சையால் அதனை எடுத்துவிட்டது", என்கிறார். "எல்லோரும் சொல்வது, நான் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்றுதான்",
அவரது கடையில் பேசிக்கொண்டிருந்தபோது, பந்தேல்கண்டில் உள்ள கிராமமொன்றில் கடை வைத்திருக்கும் வீரேந்திர குப்தா வந்தார். அவர் ஆர்டரை சொல்வதற்கு முன், மிர்சாவிடம் தான் எப்படி பணம் செலுத்த போகிறேன் என்பதை தெளிவாக கூறிவிடுகிறார் வீரேந்திரர். "நீங்கள் 5 ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்வீர்கள் தானே? அப்படியில்லையென்றால் வேறு வழியில்தான் பணம் செலுத்த வேண்டும்."
வீரேந்திரர் சொல்வதை மென்மையாக மறுக்கிறார் மிர்சா. "நான் 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்வேன். ஆனால், 5 ரூபாய் நாணயங்களை தராதீர்கள்.", என்கிறார் மிர்சா. வீரேந்திரர் அங்கிருந்து சென்றபின்பு மிர்சா சொல்கிறார், "நாணயங்களை வாங்கிக்கொள்ளவில்லை என்றால், சிலர் போலீசிடம் சொல்லிவிடுவதாக மிரட்டுவார்கள். அதனால், விற்பதற்கு முன்பு நாங்கள் இதுபற்றி தெளிவாக பேசிவிடுவோம்."
தீக்ஷித், 53
பிரெட் உற்பத்தியாளர்
நாணயங்களின் மதிப்பு: ரூ. 4 லட்சம்
இந்த பிரச்சனை எந்த தேதியில் ஆரம்பித்தது என்பதை சரியாக நினைவில் வைத்திருக்கிறார். அவரை பொறுத்தவரை, ஜூலை 15, அதாவது ஜி.எஸ்.டி. அமலானதரற்கு 15 நாட்கள் கழித்து ஆரம்பித்திருக்கிறது.
கடந்த மாதம், தீக்ஷித்திடம் ரூ.4 லட்சத்திற்கு நாணயங்கள் இருந்தபோது, நாணயங்களை வங்கிகளில் ஏற்றுக்கொள்வது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக பதில் விளக்கமளிக்க வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கிக்கு கடிதம் எழுதினார். "அதற்கு ரிசர்வ் வங்கி அனுப்பிய பதிலை எஸ்.பி.ஐ. வங்கி எனக்கு அனுப்பியது.
தீக்ஷித் அந்த பதிலை வாசிக்கிறார். "நாணயவியல் சட்டம் 2011, பிரிவு 6-ன் படி, ஒரு ரூபாய்க்கு குறைவாக உள்ள நாணயங்களை, ஆயிரம் ரூபாய்க்கும் மேல் பணம் செலுத்துவதில் சட்டப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும்."
அதன்படி, "நான் 1,000 ரூபாய்க்கும் குறையாமல் இருக்கக்கூடிய ரூ.1 நாணயங்களை மட்டும் தான் வங்கிகளில் ஏற்றுக்கொள்ளப்படும்."
தீக்ஷித் மற்றும் அவருடைய சகோதரர்கள், உற்பத்தி செய்யும் பிரெட்களை, அருகிலுள்ள 8 மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். "டீலர்கள் எங்களிடம் வந்து உள்ளூர் வணிகர்கள் நாணயங்களையே வாங்குவதாக சொல்கின்றனர். நான் சிலரிடம் காசோலையாக கேட்கிறேன். ஆனால், இங்குள்ள பலரும் சிறு வணிகர்கள். பல சமயங்களில் காசோலை பவுன்ஸாகிவிடும். இதற்கு நான் அபராதம் செலுத்த வேண்டும் என்பதால், என்னுடைய லாபத்தில் பாதி அதிலேயே போய்விடும்.", என்கிறார்.
"நாங்கள் நாணயங்களை வாங்க மறுத்துவிட்டால், தொலைவில் உள்ள அலகாபாத், பந்தேல்கண்ட் மாவட்டங்களில் உள்ள வணிகர்கள் சரக்குகளை எங்களிடமே கொடுத்துவிடுவார்கள். அவர்கள் அப்படி கொடுக்கும் சயமத்தில் சரக்குகள் பயனற்றதாகியிருக்கும்.", என்கிறார். "பிரெட் உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த மாதம் இந்த பிரச்சனையை எழுப்பியது. ஆனால், யாரும் எங்கள் பிரச்சனையை கேட்பதாக இல்லை."
இந்திய தொழிகள் சங்கத்தின் உதவியை நாட திட்டமிட்டுள்ளார் தீக்ஷித்.
இந்த சங்கத்தின் தலைவர் சுனில் வைஷ்யா, சிறு, குறு வணிகத்திற்கு பொறுப்பாளர். மற்ற வணிகர்களும் இதுகுறித்து தங்களிடம் பேசியுள்ளதாக தெரிவிக்கிறார். "இந்த பிரச்சனை ஜி.எஸ்.டி.க்கு பின்பு மிகவும் மோசமாகிவிட்டது. ஏனென்றால், சப்ளையர்கள், வங்கிகள் நாணயங்களை வாங்க மறுத்துவிட்டனர்."
வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இத்தகைய பிரச்சனைகள் இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உட்பட. "சிறு வணிகர்களின் இந்த பிரச்சனை குறித்து ரிசர்வ் வங்கிக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். இதுகுறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி கேட்டது. அதையும் அளித்திருக்கிறோம்."
இந்திய தொழில் சங்கத்தின் லக்னோ பிரிவின் செயல் இயக்குநர் டி.எஸ்.வர்மா கூறுகையில், "இந்த பிரச்சனை பண மதிப்பு நீக்க நடவடிக்கையைவிட மோசமடையலாம்.". "சிறு வணிகர்களிடம் லட்சக்கணக்கில் தேங்கி இருப்பதென்பது, அவர்கள் அந்த தொழிலை மூடுவதற்கு ஒப்பானது. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, குறைந்தட்சம் அவர்கள் பணத்தை முறையாக மாற்றிக்கொள்ளவாவது முடிந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல. வணிகர்கள் மிரட்டப்படுகிறார்கள். பணத்தை மாற்றுவதற்கு பெரும் தொகையை கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கிறது.", என்று கூறும் வர்மா, அக்டோபர் 14 அன்று அனுப்பிய கடிதத்திற்கு இன்னும் ரிசர் வங்கி பதிலளிக்கவில்லை என தெரிவிக்கிறார்.
நம்பிக்கை இழந்த தொனியில் பேசுகிறார் தீக்ஷித். "நேற்று என் அம்மாவுக்கு மருந்துகள் வாங்க மருந்தகத்திற்கு சென்றேன். அங்கும் நாணயங்களை வாங்குவதில்லை. இப்போது, பிச்சைக்காரர்களும் நாணயங்களை வாங்குவதில்லை", என்கிறார்.
கீதா சௌஹான், 43
அங்காடி ஒன்றின் முன்னாள் உரிமையாளர்
நாணயங்களின் மதிப்பு: ரூ.6,000
கீதா தனது வீட்டிலேயே கடை அமைத்து அதனை 10 ஆண்டுகளாக நடத்தி வந்தார். ஆனால், 3 மாதங்களுக்கு முன்பு, அவரது கடையில் ரூ.25,000 மதிப்புடைய சில்லறைகள் மலைபோல் குவிந்திருந்தபோது அந்த கடையை மூடிவிட்டதாக தெரிவிக்கிறார். இவரைப்போன்ற பல வணிகர்களுக்கு மக்கள் நாணயங்களைதான் தருகின்றனர். ஆனால், அவர்கள் மார்க்கெட்டுகளில் அதே நாணயங்களை தரும்போது மக்கள் அதனை வாங்கிக் கொள்வதில்லை என குறிப்பிடுகிறார்.
"என்னுடைய மகள் திருமணத்தை டிசம்பர் 4-ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், போதிய பணம் இல்லாததால் திருமணத்தை 6 மாதங்கள் தள்ளிப்போட வேண்டியிருந்தது. என்னுடைய மகனுக்கு டெலிவரி செய்யும் வேலை கிடைத்தது. ஆனால், அந்த வருமானம் போதவில்லை", என கூறுகிறார் கீதா. கீதா நடத்திவந்த கடைதான் அவர்களது குடும்பத்திற்கே வாழ்வாதாரம்.
கடையை மூடியபின்பு தான் அனுபவித்த இன்னல்களை கூறுகிறார் கீதா. "வீட்டிற்கு தேவையான மாதாந்திர பொருட்களை வாங்குவதை நிறுத்திவிட்டோம். என்னிடம் இன்னும் ரூ.1, 2 நாணயங்கள் 5,000 ரூபாய் வரை இருக்கிறது, அதை யாருமே வாங்குவதில்லை".
பெயர் தெரிவிக்க விரும்பாதவர், 38
திண்பண்ட உற்பத்தியாளர்
நாணயங்களின் மதிப்பு: ரூ.4.5 லட்சம்
ரூ.2, ரூ.5, ரூ.10 நாணயங்கள் அடங்கிய சாக்குகளுக்கிடையே அமர்ந்துகொண்டு, ஏன் தன் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை என்பதை தெரிவிக்கிறார். "எந்த வணிகரும் சர்ச்சையில் சிக்குவதை விரும்பவில்லை. நாங்கள் அமைதியாக தொழில் செய்ய விரும்புகிறோம். ஆனால், இந்த பிரச்சனை எல்லை மீறிவிட்டது."
தொடர்ச்சியான மிரட்டல்கள் குறித்து அவர் பேசுகிறார். "எங்களுடைய சரக்குகள் பந்தேல்கண்ட் மற்றும் பூர்வாஞ்சல் வரை செல்கிறது. திண்பண்டங்களை உள்ளூர் வணிகரிகளுக்கு விற்பனை செய்கிறோம். அவர்கள் எங்களுக்கு சில்லறையாகத்தான் பணம் தருகிறார்கள். இங்குள்ளவர்கள் நாணயங்களை மென்மையாக மறுக்கிறார்கள். நீங்கள் பூர்வாஞ்சலுக்கு சென்று பாருங்கள். நாணயங்களை வாங்காவிட்டால், இந்திய பணத்தை வாங்காததற்காக அவர்கள் எங்களை போலீசில் "தேச துரோகி" என சொல்லிவிடுவோம் என எங்களுடைய டீலர்களை சிலர் தொடர்ந்து மிரட்டுகிறார்கள்."
அவருடைய அலுவலகத்தில் ரூ.4.5 லட்சம் மதிப்பில் நாணயங்கள் சாக்குகளில் இருப்பதாக தெரிவிக்கிறார். பெரிய பெரிய சாக்குகளில் ரூ.25,000, ரூ.40,000, ரூ.10,000 என இருக்கிறது. சிறிய பிளாஸ்டிக் பைகளில், ரூ.1,000 மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களும், ரூ.500 மதிப்பிலான 5 ரூபாய் நாணயங்களும் உள்ளன. அதுமட்டுமல்லாமல், 1 ரூபாய் நாணயங்களும் உள்ளன.
அவருக்கு ரூ.10 நாணயங்களைவிட ரூ.1 மற்றும் ரூ.2 நாணயங்களே அதிக சிக்கலை தருகிறது.
எவ்வளவு சிரமம் என்றால், லாரிகளிலிருந்து சரக்குகளை இறக்கும் கூலி தொழிலாளிக்கு ரூ.6,000 சம்பளத்தை நாணயங்களாக வாங்கிக்கொள்கிறீர்களா என உரிமையாளர் கேட்கும் அளவுக்கு இருக்கிறது. ஆனால், அந்த தொழிலாளி ஒரு சிரிப்புடன் அதை மறுத்துவிடுவார்.
சமீபத்தில் நடந்த போஸ்டர் சர்ச்சை குறித்து அவர் தெரிவிக்கையில், "ஒரு சிறு வணிகருக்கு ரூ.4 லட்சத்திற்கு நாணயங்களை சேர்த்து பூட்டி வைப்பதென்பது மிகப்பெரிய நஷ்டம். இது எங்கள் குடும்பங்களின் பிரச்சனை அல்ல. எங்களை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் குடும்பங்களின் பிரச்சனையும்தான். இதுவரை, நாங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவில்லை. ஆனால், இதே நிலைமை நீடித்தால் நாங்கள் அதை செய்ய வேண்டியிருக்கும்."
உத்தரபிரதேச மாநிலத்தின் தொழில் வளர்ச்சி துறை அமைச்சர் சதீஷ் மஹானா கான்பூரை சேர்ந்தவர்தான். இதுகுறித்து பேசும்போது, "எந்த வணிகரும் என்னை சந்தித்து இதுபற்றி பேசவில்லை. ஆனால், இந்த பிரச்சனை குறித்து எனக்கு தெரியும். மேலும், முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லாவிடம் தெரிவித்துள்ளோம். மதிப்புள்ள நாணயங்களை வங்கிகள் ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடாது. இதுகுறித்து வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது", என்றுகூறும் அமைச்சர் வணிகர்களிடம் இதுகுறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
இந்த மாதிரியான வெற்றுரைகளுக்கான காலம் முடிந்துவிட்டது என அந்த பெயர் சொல்ல விரும்பாத வணிகர் தெரிவிக்கிறார். "இந்த நாணயங்களை சமாளிக்க அரசால் முடியவில்லையென்றால், அவற்றை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும், ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைபோல."
தேசவிரோதம் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் இந்த வணிகர்கள் தயங்கவில்லை. "எங்களை தேசதுரோகிப என வழக்கு தொடுப்பார்கள். ஆனால், நாங்கள் பெரிய போராட்டங்களுக்குன் தயாராகிவிட்டோம்."
தமிழில்: நந்தினி வெள்ளைச்சாமி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.