தமிழின் மிக முக்கியமான கவிஞர் மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் எழுதியுள்ள, 'யாரும் எனக்கு எந்த இடத்தையும் தருவதிலை’ என்ற கவிதையைப் படித்து பலரும் லைக் செய்து கம்மெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர். கவிஞர் மனுஷ்யபுத்திரன் தி.மு.க சார்பில், டிவி விவாதங்களில் பங்கேற்று உறுதியான வாதங்களை முன்வைத்து வருகிறார். தற்போது, கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள இந்த கவிதை கவனம் பெற்றுள்ளது.
யாரும் எனக்கு
எந்த இடத்தையும் தருவதிலை
எந்த வாய்ப்பையும் வழங்குவதில்லை
எந்த வெகுமதியும் அளிப்பதில்லை
காரணம்
நான் இந்த சக்கர நாற்காலியிலேயே
அமர்ந்திருப்பதால்
என்னால் யார்முன்னும்
எழுந்து கைகட்டி நிற்க முடியவில்லை
குனிந்து வணங்க முடிவதில்லை
மண்டியிட்டு அமர முடிவதில்லை
எவருடைய பாதங்களையும் தொடமுடிவதில்லை
உயரங்களில் இருப்பவர்கள்
அவ்வாறு செய்வதையே விரும்புகிறார்கள்
அவ்வாறே செய்பவர்களுக்கே
எல்லா நற்பயன்களையும் அளிக்கிறார்கள்
நான் விரும்பினால்கூட
அதையெல்லாம் செய்ய முடியாது
சக்கர நாற்காலி
அதற்கெல்லாம் பெரிய தடையாக இருக்கிறது
சக்கர நாற்காலியில்
நான் ஒரு அரசனைபோல
எப்போதும் அமர்ந்திருக்கிறேன்
என் முதுகெலும்பு நேராகவே இருக்கிறது
அதனால் யாரும் எனக்கு
அன்பு செய்ய மறுக்கிறார்கள்
சக்கர நாற்காலி
என் உடலை
எந்த ஆபாச உடல்மொழியும் இல்லாமல்
எந்த அடிமைப் பாசாங்கும் இல்லாமல்
கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது
நான் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுகிறேன்
எனக்கு கிடைக்கவேண்டிய எல்லாமே
இரண்டு கால்களால் எழுந்து நின்று
பிறகு குனிந்து வணங்குபவர்களுக்கு கிடைக்கிறது
சக்கர நாற்காலியில் இருக்கும் மனிதனால்
குனியவே முடியாது
இது அவர்கள் அகந்தையைக்
காயப்படுத்துகிறது
எல்லாப் பட்டியல்களிலிருந்தும்
அவர்கள் என் பெயரை அடித்துவிடுகிறார்கள்
நான் உறுதியான ஆதாரங்களை
உங்களுக்குத் தருகிறேன்
சக்கர நாற்காலி
ஒருவனை தலை நிமிர்ந்துவாழச் செய்கிறது
ஆனால் அதில் அமர்ந்திருக்கும் மனிதன்
எல்லோராலும் தோற்கடிக்கப்படுகிறான்.
கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள இந்த கவிதை வாசகர்களால் அரசியல் கவிதையாகப் புரிந்துகொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.