இன்று உலக புற்றுநோய் தினம். ஆரோக்கியமான உணவு பழக்கம், வாழ்வியல் முறைகளை கடைபிடிப்பது மட்டும்தான், புற்றுநோயிலிருந்து நம்மை ஓரளவு காத்துக்கொள்ளும் வழிகளாகும்.
புகை, மது பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டும்தான் புற்றுநோய் ஏற்படும் என நம்மிடையே தவறான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆனால், அத்தகைய பழக்கம் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படித்தான், அமர் பாஸ்கர் என்பவர், மது, புகை பழக்கம் இல்லாமல் இரண்டு முறை நாக்கில் புற்றுநோய் ஏற்பட்டு அதிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டவர். புற்றுநோயால் அவர் அடைந்த வலி, அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்கள் ’Being You’ எனும் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
கடந்த 2006-ஆம் ஆண்டு அமர் பாஸ்கருக்கு நாக்கில் காயம் ஏற்பட்டு ஆறாமல் இருந்துள்ளது. பலகட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு நாக்கில் புற்றுநோய் என்பது உறுதியானது. மது பழக்கம், புகை பழக்கம் இல்லாமல் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டது குறித்து அமர் பாஸ்கர் அதிர்ச்சியில் உறைந்தார். பற்கள் மூலம் நாக்கை தொடர்ந்து உரசிக் கொண்டே இருந்தால், அது அல்சராக மாறி, நாளடைவில் புற்றுநோயாக வாய்ப்புண்டு என மருத்துவர் அமர் பாஸ்கரிடம் விளக்கியுள்ளார்.
அதன்பின், குடும்பத்தினரின் உறுதுணையுடனும், ஆதரவுடனும், ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி, பயோதெரபி என பல சிகிச்சைகள் மேற்கொண்டு நம்பிக்கையுடன் புற்றுநோயிலிருந்து மீண்டார்.
ஆனால், அவரது மகிழ்ச்சி சில காலம் கூட நீடிக்கவில்லை. மீண்டும் அதே புற்றுநோய் ஏற்பட்டது. இதனால், மன அழுத்தம், நம்பிக்கையின்மைக்கு ஆளானார் அமர் பாஸ்கர். இருந்தாலும், நம்பிக்கையை வரவழைத்து மீண்டும் புற்றுநோயிலிருந்து மீண்டார்.
இப்போது, அமர் பாஸ்கர் நமக்கு சொல்லும் வார்த்தைகள், “வேலை, உழைப்பு, நேர்த்தியாக இருக்கிறோம் என இல்லாமல், அமைதியுடனும் தாழ்மையுடனும் இருக்க வேண்டும்.”, என்கிறார். தற்போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிவரும் அமர் பாஸ்கர், “வாழ்க்கையை மெதுவாகவும், சின்ன சின்ன விஷயங்களையும் அனுபவிக்க வேண்டும்”, என்கிறார்.