ஆண்களைவிட பெண்களுக்கு அதிகளவில் பக்கவாதம் ஏற்படுவதற்கு, அவர்களின் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம், குறிப்பிட்ட வயதுக்கு முன்பாகவே பூப்பெய்தல் மற்றும் மெனோபாஸ் நிலையை அடைதல் ஆகியவை காரணமாக இருக்கலாம் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி பக்கவாதம் தான் உடலில் இயலாமையை உருவாக்கும் மிக முக்கிய காரணமாகும். இந்த பக்கவாதத்திற்கு ஆண்டுதோறும் ஆண்களைவிட அதிகமாக 55,000 பெண்கள் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பக்கவாதத்தால் அதிக பெண்களே உயிரிழப்பதாகவும் இந்த ஆய்வை நிகழ்த்திய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு வயதாகும்போது, இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு அறிகுறியாக ஹார்ட் அட்டாக்கைவிட அதிகளவில் பக்கவாதம் தான் தோன்றும் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆய்வுக்காக, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே பொதுவாக காணப்படும் ஒற்றுமைகள் அலசி ஆராயப்பட்டன. ஹார்மோன்களின் ஏற்ற இறக்கம், ஹார்மோன் தெரபி, குறிப்பிட்ட வயதுக்கு முன்பாகவே பூப்பெய்தல் மற்றும் மெனோபாஸ் நிலையை அடைதல் ஆகியவை காரணமாக இருக்கும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இத்தகைய பாதிப்புகள் உள்ள பெண்கள் எதிர்காலத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்படாமல் இருக்க ஆரோக்கியமான வாழ்வியல் முறையை கடைபிடிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.