பிறந்த குழந்தையுடன் தாயை பிணைத்து வைக்கும் காரணியாக தாய்ப்பாலை சொல்லலாம். அத்தகைய தாய்ப்பாலில் செயின், மோதிரம், டாலர்கள், உள்ளிட்ட நகைகள் செய்து சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் அசத்தி வருகிறார்.
சென்னையை சேர்ந்த ப்ரீத்தி விஜய் தான் தாய்ப்பால் மூலம் நகைகள் செய்து வருபவர்.
தாய்ப்பால் மூலம் இத்தகைய புதிய கைவினை பொருட்களை உருவாக்கி வரும் ப்ரீத்தி விஜய், ScoopWhoop இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில், “நான் கடந்த ஐந்து வருடங்களாக கைவினை பொருட்கள் செய்து வருகிறேன். நான் தாய்மார்கள் பலர் அடங்கிய அமைப்பு ஒன்றில் இருக்கிறேன். அந்த அமைப்பில் உள்ள ஒருவர், தாய்ப்பால் மூலம் நகைகள் செய்பவர்கள் யாராவது இந்தியாவில் இருக்கிறார்களா என கேள்வி கேட்டார். அப்போதுதான், நாம் ஏன் அதை செய்யக்கூடாது என எனக்கு தோன்றியது”, என தெரிவித்தார்.
தாய்ப்பால் எளிதில் கெட்டுப்போகக் கூடிய திரவம். அதனை வைத்து நகைகள் செய்வது என்பது உண்மையில் சாதாரணமான விஷயம் அல்ல.
“தாய்ப்பால் மூலம் ஆரம்பத்தில் நான் நகைகள் செய்ய ஆரம்பித்தபோது, எல்லாவிதமான தாய்ப்பால் கெட்டுப்போகாமல் இருக்க அனைத்து வகையான வேதிபொருட்களையும் உபயோகித்து பார்த்தேன். ஆனால், அவற்றை உபயோகித்தும் ஒரு மாத காலத்திலேயே தாய்ப்பால் நிறம் மாறிவிடும். அதன்பிறகு, இதற்கு தீர்வு காண நான் என் தோழிகளிடம் ஆலோசனைகளை கேட்டேன்.”, என கூறுகிறார் ப்ரீத்தி விஜய்.
அதன்பிறகு நகைகள் செய்யும்போது தாய்ப்பால் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற ஐடியா ப்ரீத்தி விஜய்க்கு கிடைத்தது. அதன்பிறகு, குழந்தையின் முடி, தொப்புள் கொடி, குழந்தையின் முதல் பல் ஆகியவற்றை அப்படியே பாதுகாக்க அவற்றின் மூலம் நகைகள் செய்கிறார் ப்ரீத்தி விஜய்.
இதையடுத்து, தாய்ப்பால், குழந்தையின் முடி, பல், தொப்புள் கொடியை காலம் முழுமைக்கும் பாதுகாப்பாக வைக்க நினைப்பவர்கள், ப்ரீத்தியை அனுகி நகைகளாக செய்து வாங்கிக் கொள்கின்றனர். வாரத்திற்கு 12 ஆர்டர்களாவது நாடு முழுவதிலும் இருந்து வருவதாக ப்ரீத்தி விஜய் தெரிவிக்கிறார்.
என்ன நகை வேண்டுமோ அதற்கேற்றாற்போல் அவற்றின் விலை மாறுபடுகிறது. இருப்பினும், ரூ.1,000-ரூ.4,000 வரை விலை அமைந்திருக்கும். பெரும்பாலான ஆர்டர்கள் அவரது முகநூல் பக்கத்தின் மூலம் கிடைப்பதாக ப்ரீத்தி விஜய் தெரிவித்தார்.
ஒரு குழந்தைக்கு தாயான ப்ரீத்தி, இத்தகைய நகைகள் உலகம் முழுவதிலும் உள்ள தாய்களுக்கு விலை மதிப்பற்றது என கூறினார்.
”இந்த நகைகள் வைரம், தங்கத்தை விட விலை மதிப்பற்றது. பலரும் இதனை அவர்களுடைய குழந்தைகளுக்கே பரிசளிப்பார். இன்னும் சிலர், அதனை பாதுகாத்து வைத்து தன் குழந்தையின் வருங்கால கணவர்/மனைவிக்கு பரிசளிக்கலாம். இது தாய் - குழந்தை உறவை பிரதிபலிக்கிறது.”, என ப்ரீத்தி விஜய் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.