ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தினால், உடலில் ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகரித்து இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகம் முழுவதும் செப்டம்பர் 28-ஆம் தேதி உலக இதய தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒழுங்கான வாழ்வியல் முறைகளை கடைபிடித்து, இதய நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவே உலக இதய தினம் ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுகிறது.
கொழுப்புகளில் நான்கு வகைகள் உண்டு. நீரில் கரையும் கொழுப்பு, நீரில் கரையா கொழுப்பு, மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு, மற்றும் ட்ரான்ஸ் கொழுப்புகள் ஆகியன. இதில், கடைசியாக குறிப்பிடப்பட்டுள்ள ட்ரான்ஸ் கொழுப்புகள் உடலுக்கு மிகுந்த ஆபத்துகளை தர வல்லன.
இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகளை கொண்ட சமையல் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதையும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் வறுப்பதற்கோ, பொரிப்பதற்கோ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வனஸ்பதியில் இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ளன.
“இந்தியர்கள் தாம் எதை சாப்பிட வேண்டும் என்பதை பெரும்பாலும் அறிவதில்லை. ட்ரான்ஸ் கொழுப்புகள் உடலில் எந்த வடிவங்களில் வேண்டுமானாலும் எளிதில் நுழைந்துவிடும். இந்த ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள எண்ணெயை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நமது உடலில் இத்தகைய ட்ரான்ஸ் கொழுப்புகள் அதிகம் இருந்தால் இதய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. 4 கிராமை விட குறைவாக சாச்சுரேட்டட் கொழுப்புகளை கொண்ட சமையல் எண்ணெயையெ பயன்படுத்த வேண்டும்”, என எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் சந்தீப் மிஸ்ரா தெரிவித்தார்.
சமையல் எண்ணெயை அதிக நேரம் சமைக்க கூடாது எனவும் சந்தீப் மிஸ்ரா எச்சரிக்கிறார்.
இதையும் படியுங்கள்: உலக இதய தினம்: இதய நோய்களிலிருந்து தப்பிக்க நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்