சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு ஒழுங்கற்ற இதயத் துடிப்பு கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சிறுநீரகம் செயலிழந்தவர்களிடையே இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரக செயல்பாடுகளில் குறைபாடு உள்ளவர்கள் அல்லது சிறுநீரில் புரதப்போக்கு அதிகம் உள்ள பிரச்சனை கொண்டவர்கள் மற்றும் சிறுநீரகம் செயலிழக்கும் அறிகுறி உள்ளவர்களுக்கு, முறையற்ற இதயத்துடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள், மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
“சிறுநீரகத்தில் சாதாரண குறைபாடுகள் கொண்டவர்களுக்கும் முறையற்ற இதயத்துடிப்பு கோளாறு ஏற்படும் ஆபத்து அதிகம்.”, என இந்த ஆய்வை வழிநடத்திய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் நிஷா பன்சால் தெரிவித்தார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
”முறையற்ற இதயத்துடிப்பால் இதய நோய்களுக்கான சிகிச்சைகளை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்படும். இல்லையென்றால், அந்த சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வேலை செய்யாது. அதனால் சிறுநீரகம் கோளாறு உள்ளவர்கள், முறையற்ற இதயத்துடிப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.”, என பேராசிரியர் நிஷா பன்சால் கூறினார்.
மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும், சிகிச்சைகளையும் மருத்துவர்களிடம் சென்று மேற்கொள்ள வேண்டும். முறையற்ற இதயத்துடிப்பை அவர்கள் அலட்சியம் செய்யக் கூடாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.