உங்கள் மகள்/மகன் படிப்பில் நன்றாக செயல்படவில்லையா? யாருடனும் ஒன்றிணைந்து செயல்படவில்லையா? வீட்டில் குழந்தைகள் பெரியவர்களால் எதிர்கொள்ளும் உடல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் தண்டனைகள் ஆகியவை, அவர்கள் கல்வியில் திறம்பட செயலாற்ற தடையாக அமையும் என பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்த முழு ஆராய்ச்சியும் Child Abuse and Neglect என்ற ஆராய்ச்சி இதழில் வெளியானது. இதற்காக, 650 குழந்தைகள் மற்றும் அவர்களது பாதுகாப்பாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள், லேசான தண்டனை, கடுமையான தண்டனை, உடல் ரீதியான துன்புறுத்தல் ஆகிய மூன்று வகைகளில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டனர்.
உடல் ரீதியான துன்புறுத்தல்கள் சிறியதாகவோ அல்லது கடுமையாகவோ என எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும், அது குழந்தைகளின் அறிவு சார்ந்த செயல்பாடுகளை பாதிக்கிறது என அந்தா ஆராய்ச்சி கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், உடலை காயப்படுத்தாத வகையில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தண்டனைகளும் அவர்கள் படிப்பில் கவன சிதறலை ஏற்படுத்தும் எனவும், மற்ற குழந்தைகளிடமிருந்து அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள் எனவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
குழந்தைகளுக்கு பெரியவர்களால் அளிக்கப்படும் உடல் ரீதியான துன்புறுத்தல்களால், அவர்களுக்கு காயம் உள்ளிட்டவை ஏற்படாவிட்டாலும், அவர்கள் மன ரீதியாக பயம், துயரம் உள்ளிட்ட மனநிலைகளுக்கு ஆளாகின்றனர். இதனால், அவர்களின் மூளை வளர்ச்சி, அதன் அமைப்பு பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்தத்தில் அவர்களது மொத்த செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.
“குழந்தைகளுக்கு இத்தகைய உடல் ரீதியான துன்புறுத்தல்கள் மூலம் புரிய வைப்பதை விட, சொல்லி புரிய வைப்பதுதான் அதிக பலனை அளிக்கும்”, என பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் துணை பேராசிரியர் சாரா ஃபாண்ட் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளை இத்தகைய துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்காமல், வேறு வகைகளில் அவர்களுக்கு புரிய வைப்பது குறித்து பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும் என சாரா ஃபாண்ட் பரிந்துரைக்கிறார்.