கேரளாவில் திங்கள் கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கேரள அரசு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான சுற்றுலா திட்டங்கள் மற்றும் ஆஃபர்களை அறிவித்துள்ளது.
“நாட்டின்புறங்களில் ஓணம் உண்ணம், ஓணசம்மனங்கள் வங்கம்’ (ஓணம் திருவிழாவை கிராமங்களில் கோண்டாடுவோம், ஓணம் பரிசுகளை பெறுவோம்) என்ற பெயரில், ஓண பண்டிகையின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சுற்றுலா பயணிகள் அறியும் வகையில் கேரள அரசு சுற்றுலா திட்டங்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுற்றுலா துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியதாவது, “ஓணத்தை பற்றி சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ள சுற்றுலா துறை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஓணம் சதயா எனப்படும் அப்பண்டிகையின் சிறப்பு உணவுகள், ஓணகளிக்கள் எனப்படும் சிறப்பு விளையாட்டுகளில் கலந்துகொள்ளுதல் என பல சிறப்பம்சங்கள் அடங்கிய திட்டஙக்ளை அறிவித்துள்ளோம். உள்ளூர் மக்களால் நடத்தப்படும் சுற்றுலா நிறுவனங்களின் மூலம் இத்திட்டங்களை பெறலாம். அதன் மூலம் அவர்களுக்கும் வாய்ப்புகள் பெருகும்.”, என கூறினார்.
வீட்டு உணவுகள், உள்ளூர் டீக்கடைகள், உணவகங்கள் ஆகியவற்றுக்கு வாய்ப்புகளை அளிக்கும் வகையில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகள் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், கைத்தறி ஆடைகள், உள்ளூர் உற்பத்தி பொருட்கள், உணவு பொருட்களை வாங்கவும் இந்த ஓணம் பண்டிகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“இதை ஒரு சிறிய முன்முயற்சியாக ஓணம் பண்டிகையின்போது மேற்கொள்கிறோம். இதன்பின், மற்ற நாட்களிலும் இதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். சுற்றுலா துறை சார்ந்து இயங்கும் தொழில் முனைவோர்களுக்கு இது பொருளாதார ரீதியில் உதவியாக இருக்கும். அதேபோல், சிறு வியாபாரிகள், கலை விற்பன்னர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கும்”, என அமைச்சர் தெரிவித்தார்.