பல கட்ட ஆய்வுகளுக்குப் பின், மனித முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம், மனித திசுக்கள் மூலம் மனித முட்டையை உருவாக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.
இச்சாதனையை அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் புரிந்துள்ளனர். இந்த ஆராய்ச்ச்சியை எடின்பர்க் மருத்துவமனை விஞ்ஞானிகள் மற்றும் ’செண்டர் ஃபார் ஹியூமன் ரீப்ரொடக்ஷன்’ எனும் நியூயார்க் அமைப்பின் விஞ்ஞானிகளும் இணைந்து மேற்கொண்டனர். இதன்மூலம், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களின் சிகிச்சைகள் எளிதாகும் எனவும், கருத்தரிப்புக்கான புதிய சிகிச்சைகள் சாத்தியமாகும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி Molecular Human Reproduction எனும் ஆராய்ச்சி இதழில் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
முதலில் விஞ்ஞானிகள் எலிகளின் திசுக்கள் மூலம் அவற்றின் முட்டைகளை ஆய்வகத்தில் உருவாக்கி முயற்சி செய்தனர். அந்த முயற்சி வெற்றி பெற்றதற்குப் பின்னர், மனித திசுக்களை வைத்து மனித முட்டையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது, அந்த முயற்சியிலும் வெற்றியடைந்துள்ளனர்.
தற்போது, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மனித முட்டைகள் எந்தளவு ஆரோக்கியமானது என்பதைக் கண்டறியும் சோதனையில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
இந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இத்தகைய முட்டைகள் மூலம் ஆண் விந்தனுக்களை செலுத்தி கருத்தரிப்பை நிகழ்த்த முடியும் என விஞ்ஞானிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.
மேலும், புற்றுநோய் சிகிச்சை எடுத்துவரும் பெண்கள் தங்களின் கருமுட்டையை இத்தகைய தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்து, பின்னர் கருத்தரிப்பு நிகழ்த்த இச்சாதனை துணைபுரியும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று.
எனினும், இத்தகைய தொழில்நுட்பம் மூலம் மனித முட்டைகளை உருவாக்குதல் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.