தொப்பை உள்ளவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தொப்பை உள்ளவர்களுக்கு புற்றுநோய் அல்லாத செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றக்கூடிய தன்மை அதிகம் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆங்காஜீன் (Oncogene) எனும் ஆராய்ச்சி இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய் ஆகியவை உடல் பருமனுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. இந்நிலையில், உடல் பருமனைவிட குறிப்பாக தொப்பை இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
தொப்பையில் உள்ள கொழுப்பிலிருந்து வெளியேறும் ஒருவகை புரோட்டீன், புற்றுநோய் செல்களை உருவாக்கும் வல்லமை பெற்றது என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. மேல்வயிறை விட அடிவயிற்றில் உள்ள தொப்பையின் கொழுப்பில் இருந்து அத்தகைய புரோட்டீன்கள் அதிகளவில் வெளியேறுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். கொழுப்பில் இருந்து வெளியேறும் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜென் புற்றுநோய் செல்களை அதிகளவில் உருவாக்கும் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
புற்றுநோய் செல்கள் உருவாகுவதற்கான காரணம் தெரிந்தால் தான், புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சை மற்றும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வழிமுறைகளை நோக்கி செல்ல முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உடல் பருமனுடன் உள்ளனர். இந்நிலையில், உடல் பருமனுடன் புற்றுநோய்க்கான நேரடி தொடர்பு குறித்து அதிர்ச்சி தகவல் இந்த ஆய்வில் வெளியாகியுள்ளது. அதனால், சரியான உணவு முறை மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.