செல்லப் பிராணிகள் வளர்ப்பது பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமானது ஒன்று தான். பெரும்பாலானோர் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணியை தங்கள் குடும்பத்தில் ஒரு நபராகவே கருதுகின்றனர். அந்த வகையில், நாய், பூனை மற்றும் கிளி போன்றவைகளில் ஏராளமானோர் செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர். வியக்கத்தக்க வகையிலும், வித்தியாசமாகவும் சிலர் பாம்பு, பல்லி, ஓணான் ஆகியவற்யையும் தங்கள் செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
ஆனால், இந்தோனோஷியாவில் பெண் ஒருவர் எதை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார் தெரியுமா? கொஞ்சம் அல்ல, ரொம்பவே வித்தியாசமாக தான் இருக்கிறது அவரின் செல்லப்பிராணியை பார்க்கும் போது. சிலந்தி தான் அவரின் செல்லப்பிராணி. சிலந்தி என்றால் ஒன்று அல்லது இரண்டு அல்ல, சுமார் 1500 சிலந்திகளை வளர்த்து வருகிறார் அந்தப் பெண்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த மிங் கியூ என்பவர் தான் அந்தப் பெண் . கடந்த 2010-ம் ஆண்டு முதல் பொழுதுபோக்கிற்காக சிலந்திகளை சேகரித்துவந்த கியூ, பின்னர் அதிலே அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் பான்டாங் பகுதியில் தான் வசித்து வரும் வீட்டில் தற்போது சுமார் 1500 சிலந்திகளை வளர்த்து வருகிறாராம்.
அதுமட்டுமல்லாமல், வித்தியாசமான விலங்குகளை விற்பனை செய்யும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு வெப்சைட் ஒன்றையும் தொடங்கினார். இதற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பும் கிடைத்துள்ளதாம். இவ்வளவு சிலந்திகளை தனி ஆளாக வளர்த்து வரும் மிங் கியூவிற்கு, எப்படி முதலில் சிலந்திகள் மேல் ஆர்வம் வந்தது?
முன்னதாக ஒருமுறை தனது வீட்டின் பின்றத்தில் ஒரு 'டராண்டுலா' வகையை சேர்ந்த பெரிய சிலந்தியை பார்த்துள்ளார். அதை பார்த்ததோடு விட்டுவிடாமல், அதை சுற்றி சுற்றி பல கோணங்களில் புகைப்படம் எடுத்து ரசித்துள்ளார். அதன் அழகை கண்டு வியந்த கியூ, அப்போதிருந்தே சிலந்திகளை சேகரித்து வளர்க்கத் தொடங்கி விட்டாராம்.
இதற்காக தனது வீட்டில் சிலந்திகளை பாதுகாப்பதற்காக தேவையான மாற்றங்களை ஏற்படுத்தியதோடு, கடந்த ஏழு வருடங்களில் மட்டும் சிலந்திகளை பாதுகாப்பதற்காக கியூ சுமார் 55,000 டாலர்களை செலவு செய்துள்ளாராம்.
இந்த சிலந்திகள் சிலந்திகள் பலமுறை கியூவை கடித்துள்ள போதிலும், அவர் வழக்கம் போல அவைகளுடன் சகஜமாக பழகி வருகிறார்.
இது தொடர்பாக ருப்ட்லி செய்தி நிறுவனத்திற்கு கியூ பேட்டி அளித்தபோது, இந்த 'டராண்டுலா' வகை பெரிய சிலந்திகளை வளர்ப்பதில் சிக்கல்கள் இருக்கத் தான் செய்கின்றன. சிலந்திகளை இனப்பெருக்கத்திற்காக ஒன்று சேர்ப்பது மற்றும் இங்கிருக்கும் அனைத்து சிலந்திகளை நான் மட்டும் தான் கவனித்துக் கொள்கிறேன். எனவே, இதற்கு தான் எனது முழு நேரத்தையும் நேரத்தையும் செலவிட வேண்டியுள்ளது. அதனால், வேறு எதற்கும் கொஞ்சம் நேரம் கூட நேரம் இல்லை என்று கூறினார்.
சிலந்திகளை ஆர்வமாக வளர்த்து வரும் கியூ, "பிராடெக்ட் டிசைனிங்" துறையில் பட்டப் படிப்பு முடித்துள்ளாராம். வினோதமாக சிலந்திகளை வளர்த்து வரும் கியூவிற்கு 'டராண்டுலாவின் ராணி' என்ற புனைப்பெயரும் கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்துள்ள இந்த புனைப்பெயரை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்கிறார் கியூ.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.