திருமணம் செய்துகொள்வதற்காக காதலன் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், பெண் ஒருவர் தன் சிறுநீரகத்தையே விற்க துணிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுகுறித்து, காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது,
பீகார் மாநிலத்தை சேர்ந்த 21 வயது பெண் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். தன் பெற்றோருடன் வசித்துவந்த அவரும், அப்பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அவர்களது திருமணத்திற்கு அப்பெண்ணின் பெற்றோர் மறுத்தனர். இதையடுத்து, அப்பெண் தன் காதலர் வேலை பார்க்கும் இடமான உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்திற்கு சென்றார். ஆனால், அவரை திருமணம் செய்துகொள்ள லட்சக்கணக்கில் காதலர் பணம் கேட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், அப்பெண்ணுக்கு பணம் தேவைப்படுவதை அறிந்த உடல் உறுப்புகள் திருட்டு கும்பல், அவரது சிறுநீரகத்தை விற்றால் ரூ.1.8 லட்சம் தருவதாக கூறியுள்ளனர். அதனால், அப்பெண் தன்னுடைய சிறுநீரகத்தை விற்க முடிவெடுத்த அப்பெண், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குன் சென்றிருக்கிறார். அங்கு, அப்பெண் உடல் உறுப்புகள் திருட்டு கும்பல் யாரிடமாவது சிக்கியிருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள், பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு தொடர்புகொண்டு புகார் அளித்தனர்.
இதையடுத்து, அப்பெண்ணை மீட்ட டெல்லி பெண்கள் நல ஆணையம், அவரை சமாதானப்படுத்தி அந்த இளைஞருக்கு எதிராக புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், அதனை அப்பெண் ஏற்க மறுத்திருக்கிறார். மேலும், பீகாரில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்கும் செல்ல மறுத்தார்.
இச்சம்பவத்தின் விவரங்களை டெல்லி பெண்கள் ஆணையம், பீகார் பெண்கள் ஆணையத்திற்கு அளித்துள்ளனர். அப்பெண்ணை பணத்திற்காக ஏமாற்றிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.