2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒட்டுமொத்த நாட்டின் மனசாட்சியையும் உலுக்கிய அந்த சம்பவம் ஒடிஷாவில் அரங்கேறியது. அதன்பின்பு அதேபோன்ற பல சம்பவங்கள் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், முதன்முறையாக நடைபெற்ற அந்த சம்பவம் மனிதம் செத்துவிட்டதா என கேட்க தோன்றியது.
ஒடிஷாவை சேர்ந்த தனா மஜ்ஜி, உடல்நலக் குறைவால் காலமான தன் மனைவியை 10 கி.மீ. தூரம் தோளில் சுமந்துகொண்டு வீடு வரை சென்றார். உடன் தாயை இழந்து தேம்பி அழும் மகளுடன். அரசு மருத்துவமனையில் சடலத்தை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் தரவில்லை. பழங்குடி இனத்தை சேர்ந்த தனா மஜ்ஜியிடம் தனியார் ஆம்புலன்ஸ்கு செலுத்த பணமும் இல்லை. மனைவியை தோளில் சுமந்து சென்றார்.
இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டாகிவிட்டது. இப்போது, தனா மஜ்ஜி எப்படி இருக்கிறார் தெரியுமா? புதிய வீடு, புதிய மனைவி, புதிய பைக் என புதிய வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
இந்தியாவை மட்டும் அந்த சம்பவம் உலுக்கவில்லை. சில உலக நாடுகளையும் அசைத்து பார்த்தது. அச்சம்பவத்திற்கு பின் பலரும் தனா மஜ்ஜிக்கு உதவிக்கரம் நீட்டினர். பஹ்ரைன் பிரதமர் 9 லட்சம் நிதியுதவி அளித்தார். பல தனிநபர்கள், அமைப்புகள் நிதியுதவி செய்தன. வங்கி கணக்கே இல்லாமல் இருந்த தனா மஜ்ஜியிடம், இப்போது கணிசமான வங்கி சேமிப்பு உள்ளது.
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் தனா மஜ்ஜி. அவருடைய மூன்று மகள்களும் புவனேஷ்வரில் தங்கி படிக்கும் பள்ளியில் இலவசமாக பயில்கின்றனர். அவருடைய புதிய மனைவி அலாமதி தேய் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இப்போது புதிய பைக் ஒன்றையும் வாங்கியிருக்கிறார். ஆனால், அவருக்கு இருசக்கர வாகனம் ஓட்ட தெரியாது. இருப்பினும், உறவினர் ஓட்ட, அதன் பின்னால் அமர்ந்து ஊரை வலம் வந்துகொண்டிருக்கிறார்.
ஆனால், அப்போது இருந்த தனா மஜ்ஜி இப்போது இல்லை என அக்கம்பக்கத்தினர் வருத்தம் கொள்கின்றனர். தங்களுக்கு கிடைக்காத எல்லா அடிப்படை வசதிகளும் தனா மஜ்ஜிக்கு கிடைப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் அம்மக்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.