மும்பை ரயில் நிலையத்தில் நடை மேம்பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்த நிலையில், அந்த கோர சம்பவத்தில் சிக்கித் தவித்த பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடும் அப்பெண்ணுக்கு உதவி செய்யாமல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியவரை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மும்பையில் எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனமழையில் மின்கசிவு ஏற்பட்டு விட்டதாக வதந்தி பரவியதால், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் அவசர அவசரமாக சென்றதாலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டதாக, ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மும்பையில் பிரதான போக்குவரத்து சேவையான ரயில் போக்குவரத்தின் தரத்தை உயர்த்த மத்திய அரசு வழிவகை செய்யவில்லை என பலரும் மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, இயக்கத்தில் உள்ள ரயில்களின் தரத்தையும், பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தாமல், மும்பைக்கு புல்லட் ரயில் தேவையா என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், எல்பின்ஸ்டோன் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது பெண்களுக்கு எந்த நிலைமையிலும் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்தும் வகையில், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள போராடிய பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. உதவிக்காக ஆண் ஒருவரிடம் கை நீட்டிய அப்பெண்ணை அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
கொஞ்சமும் மனித தன்மையே இல்லாமல் உயிர் போகும் சமயத்திலும் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ரயில் நிலைய கோர விபத்தின்போது பெண்கள் பலரின் நகைகள், கைப்பை ஆகியன திருடப்பட்டன என பலரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.