ஒவ்வொரு நாளும் பெண்கள் வெவ்வேறு வடிவங்களில் பாலியல் தொல்லைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சமீபத்தில், #Metoo என்ற ஹேஷ் டேகை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி, பெண்கள் தாங்கள் சந்தித்த பாலியல் ரீதியிலான தொல்லைகள், சீண்டல்கள் குறித்த அனுபவங்களை எழுதினர். நடிகைகள் பார்வதி, ரீமா கலிங்கல் உள்ளிட்ட திரை பிரபலங்களும் தாங்கள் சந்தித்த அனுபவங்கள் குறித்து #Metoo ஹேஷ் டேகை உருவாக்கி பகிர்ந்துகொண்டனர். ஆனாலும், பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்முறைகள் எந்தவிதத்திலும் குறையவில்லை.
அதற்கு, சமீபத்திய உதாரணமாக, மஹராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் உள்ள நேரு நகரில், 17 வயது இளம்பெண் நடு வீதியில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்.
மும்பை நேரு நகர் பகுதியில் அப்பெண் டியூஷனுக்கு சென்று கொண்டிருக்கும்போது, ஒருவர் அப்பெண்ணின் மீது கற்களை வீச துவங்குகிறார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் உதவி வேண்டி அபயக்குரலில் கூச்சலிட்டுள்ளார். அப்பெண், சத்தம் எழுப்பியதும் அந்நபர், அருகே வந்து அப்பெண்ணை சரமாரியாக தாக்குகிறார். இதனால், எழுந்திருக்க முடியாத அளவு மயங்கி சரிகிறார் அப்பெண்.
இதுகுறித்து, நேரு நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்தில் மிகவும் வேதனையான ஒன்று, அங்கு பொதுமக்கள் நிறைய பேர் இருந்தும் யாரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வராமல், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதுதான்.
பெண்ணுக்கு எதிரான கொடுமைகளை பொதுமக்கள் பேசுவதற்கு முன், நம் கண்முன்னே நடக்கும் இத்தகைய கொடுமைகளுக்கு எதிர்குரல் எழுப்ப இந்திய சமூகம் பழக வேண்டும்.