”அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி, அதிலிருந்து ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை நீக்குவோம்”, என தான் கூறிய கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே மன்னிப்பு கோரியுள்ளார்.
முன்னதாக, அரசியலமைப்பு சட்டத்திலிருந்து ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தையை நீக்குவோம் என்று, மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கூறியிருந்தார். அவரது இந்த கருத்து அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்குவதாக அமைந்தது. இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆனந்த் குமார் ஹெக்டே பதவி விலக வேண்டும் என, காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, ஆனந்த்குமாரின் கருத்து மத்திய அரசின் கருத்தல்ல என, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
மேலும், மத்திய அரசும், பிரதமர் நரேந்திரமோடியும் அரசியலமைப்பு சட்டத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாக ஆனந்த் குமார் ஹெக்டே தெரிவித்தார்.
இந்நிலையில், இன்றும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர், ஆனந்த் குமார் ஹெக்டேவை பதவி விலக வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். அப்போது, பேசிய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே, ”எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. அக்கருத்து மக்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன். அரசியலமைப்பு சட்டம், நாடாளுமன்றம், அம்பேத்கரை நான் பெரிதும் மதிக்கிறேன். அரசியலமைப்பு சட்டம்தான் தலையாயது. அதில் எந்தவொரு கேள்விக்கும் இடமில்லை. ஒரு குடிமகனாக அதற்கு எதிராக நான் செயல்படமாட்டேன்”, என கூறினார்.