12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
காஷ்மீரில் மாநிலத்தில் கத்துவா என்ற பகுதியில் 8 வயது சிறுமியை 8 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை நாடு முழுவதும் ஏற்படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர், பொதுமக்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த மனிதநேயமற்ற குற்றத்தை செய்த 8 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா ட்விட்டர் பக்கத்தில், “சிறுமிகள் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்குத் தூக்கு தண்டனை உறுதி செய்ய சட்டம் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய நடவடிக்கை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை வழங்க போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுநாள் வரை, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை மட்டும் விதிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழ்நிலையில், கத்துவா சம்பவத்திற்கு பிறகு எழுந்த கடுமையான எதிர்ப்பால், தற்போது மரண தண்டனை விதிக்கும் அவசர சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டைவிட்டு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் தொடர்பாக அவசர சட்டம் கொண்டுவரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.