மதத்தின் பெயரால் இந்தியாவில் இன்றளவும் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதிலும், குறிப்பாக இந்து - முஸ்லிம் மதத்தினர் எப்போதும் ஒருவருக்கொருவர் வன்மத்தையும், வெறுப்பையுமே விதைப்பதாக இங்கொரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இரு மதத்தினரும் தங்களுக்குள் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளும் சம்பவங்கள் ஏராளமானவை உண்டு.
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூருக்கு அருகே அமைந்துள்ள கிராமம் பாம்ரவா. நாட்டில் எங்காவது மத கலவரங்கள் நடைபெறும்போது இங்குள்ள சிவன் கோவிலை யார் பாதுகாக்கின்றனர் தெரியுமா? அங்குள்ள முஸ்லிம் மக்கள் தான்.
இந்த கோவில் ஹமித் அலி கான் என்ற நவாப் தானமாக அளித்த நிலத்தில் 1788-ல் கட்டப்பட்டது. இந்த கிராமத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களுள் 75 சதவீதத்தினர் முஸ்லிம்கள். அங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
அக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்கின்றனர். திருவிழாக்களின்போது, மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகளை அவர்கள் அணைத்துவிடுவர் என்றால் பாருங்கள். அதுமட்டுமல்ல, இந்தியாவில் எஙாவது மத கலவரங்கள் நடைபெறும்போது, இந்த சிவன் கோவிலை முஸ்லிம்கள் தான் எந்த ஆபத்தும் நேராமல் பாதுகாக்கின்றனர்.