பிரபல மலையாள சீரியல் நடிகை கவிதா லஷ்மி, தன் மகனின் படிப்பு செலவுக்காக தெருவோர உணவுக்கடை ஒன்றில் தோசை சுட்டு பிழைப்பை நடத்தி வருகிறார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாட்டின்கரா பகுதியை சேர்ந்தவர் கவிதா லஷ்மி. இவர் மலையாளத்தில், ‘ஸ்த்ரீதானம்’ என்ற தொடரில் சாந்தா என்ற கதாபாத்திரத்தின் மூலம் கேரளாவில் பிரபலமடைந்தவர். இவருடைய கணவர், சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்ட நிலையில், தன் இரு பிள்ளைகளையும் அவரே கவனித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது மகன் இங்கிலாந்தில் படித்து வருகிறார். கவிதா லஷ்மிக்கு நடிப்பு தொழிலில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால், எந்தவித சொத்துகளும் இல்லாத நிலையில், படிப்பு செலவுகளை சமாளிக்க, நடிகை கவிதா லஷ்மி தெருவோர உணவுக்கடை ஒன்றில் தோசை சுட்டு பிழைப்பை நடத்தி வருகிறார்.
இதுகுறித்து, கவிதா லஷ்மி செய்தி இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "என் குழந்தைகளின் கல்விக்காகத் தான் என் சம்பாத்தியம் முழுமையையும் செலவு செய்வேன். என் பிள்ளைகள் சொந்த காலில் நிற்க வேண்டும். அதற்காகத்தான் இந்த வேலையை செய்துவருகிறேன். இதனால், எனக்கு எந்தவித மன வருத்தமும் இல்லை. நானே உணவகம் நடத்த திட்டமிட்டிருந்தேன். ஆனால், மூட்டு வலி, இதய பிரச்சனைகள் உள்ளன. ஆனால், என் உடல் நலம் குறித்தெல்லாம் கவலையில்லை. என் மகன், மகள் எதிர்காலம் குறித்துதான் கவலையாக உள்ளது”, என தெரிவித்தார்.
இவர் சாலையோர உணவு கடையில் தோசை சுடுவதை பார்த்த மக்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவர் தோசை சுடும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.