மும்பையில் உள்ள உள்ளூர் ரயில்களின் தரத்தை மேம்படுத்தாத வரை, புல்லட் ரயிலுக்காக ஒரு செங்கலை கூட மும்பையில் வைக்க விட மாட்டேன் என மஹராஷ்டிர நவ நிர்மாண் சேனாவின் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்தார்.
மும்பையில் எல்பின்ஸ்டோன் புறநகர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கனமழையில் மின்கசிவு ஏற்பட்டு விட்டதாக வதந்தி பரவியதால், தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள மக்கள் அவசர அவசரமாக சென்றதாலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டதாக, ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மும்பையில் பிரதான போக்குவரத்து சேவையான ரயில் போக்குவரத்தின் தரத்தை உயர்த்த மத்திய அரசு வழிவகை செய்யவில்லை என பலரும் மத்திய அரசுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, இயக்கத்தில் உள்ள ரயில்களின் தரத்தையும், பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்தாமல், மும்பைக்கு புல்லட் ரயில் தேவையா என பலரும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதே கருத்தை வலியுறுத்தியுள்ள மஹராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் இயக்கத்தில் உள்ள உள்ளூர் ரயில்களின் தரத்தை மேம்படுத்தாத வரை, புல்லட் ரயிலுக்காக ஒரு கல்லை கூட மும்பையில் வைக்க விட மாட்டேன் என தெரிவித்தார்.
“மும்பை ரயில் நிலையங்களை ஆக்கிரமித்துள்ள வியாபாரிகளை நாங்கள் கொடுக்கும் கெடுவுக்குள் அரசு களைய வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அதன்பிறகு நாங்கள் எங்கள் வழியில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். வரும் அக்டோபர் 5-ஆம் தேதி மேற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகம் வரை பேரணியாக செல்வோம்.”, என கூறினார்.
மேலும், இந்த கோர விபத்திற்கு மழையை மத்திய அரசு குற்றம்சாட்டுவதையும் ராஜ் தாக்கரே வன்மையாக கண்டித்தார்.
மேலும், “நமக்கு பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகளோ, எதிரிகளோ எதற்கு தேவை? நமது ரயில்வே துறையே மக்களை கொல்வதற்கு போதுமானது”, எனவும் ராஜ் தாக்கரே சாடினார்.
சமீபத்தில், இந்திய பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் அலகாபாத் - மும்பை புல்லட் ரயிலுக்கான அடிக்கல்லை நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.