தீபாவளிக்காக சென்னையிலிருந்து பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல துவங்கிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,52,048 பேர் சென்னையிலிருந்து பேருந்து மூலமாக வேறு ஊர்களுக்கு சென்றிருக்கின்றனர். அரசு பேருந்துகள், ரயில்களில் இருக்கை கிடைக்காத பயணிகள், வேறு வழியின்றி அதிக பணம் கொடுத்து தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்பவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணிப்பர். இந்நிலையில், பயணிகளின் சிரமங்களை குறைக்க கர்நாடக மாநிலத்துக்குள் புறப்படும் 22 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்படுகின்றன.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வரும் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கர்நாடகத்துக்குள் இயக்கப்படும் 22 ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன என குறிப்பிடப்பட்டிருந்தது.