கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக ஜூன் மாதம் 1-ம் தேதி தொடங்கும். அதைத் தொடர்ந்து இந்த மழை தமிழகத்திலும் பெய்யத் தொடங்கும். தற்போது தமிழகத்தில் கொளுத்தும் வெயிலால் மக்கள் காய்ந்து போய் உள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. மேலும், தமிழகத்தில் வரலாறு காணாத அளவிற்கு வறட்சியும் நிலவுகிறது.
ஏற்கனவே இந்திய வானிலை மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும் என்று அறிவித்திருந்தது. இதற்கான அறிகுறிகள் அந்தமான் தீவு பகுதிகளில் மழையுடன் தொடங்கி விட்டதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில், இன்று கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக கொச்சி வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக திருவனந்தபுரம், பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.