குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் பரிணாம கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறானது என, மத்திய அமைச்சர் சத்யபால் சிங் தெரிவித்துள்ளதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனை எதிர்த்து அறிவியலாளர்கள் பலர் மத்திய மனிதவள துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அமைச்சரின் இந்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹோமிபாபா கல்வி அறிவியல் மையம், அமைச்சர் தன் கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
முன்னதாக, ஔரங்காபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் சத்யபால் சிங், “குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என நம் முன்னோர்கள் எங்கும் நிரூபிக்கவில்லை. அதனால், டார்வினின் பரிணாம கோட்பாடு அறிவியல் ரீதியாக தவறானது. பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்திலிருந்து அந்த கோட்பாட்டை மாற்ற வேண்டும். பூமியில் மனிதன் தோன்றியதிலிருந்து அவன் மனிதனாகவே இருக்கிறான்”, என கூறியிருந்தார்.
சத்யபால் சிங் அமைச்சராவதற்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.