ஆந்திர மாநிலத்தில் திண்பண்ட பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை, உணவுப்பொருள் என தவறாக நினைத்து விழுங்கிய 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து, காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது,
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ளது எலூரு எனும் நகரம். மீசலா நீரீக்ஷனா குமார் எனும் 4 வயது சிறுவன் தன் தாயுடன் கடைக்கு சென்றிருக்கிறான். அப்போது, டைமண்ட் நிறுவனத்தை சேர்ந்த சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிய சிறுவன், வீட்டிற்கு வந்ததும் அதனை சாப்பிட துவங்கினான்.
அப்போது, அந்த சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த ரப்பர் பொம்மையை, உணவுப்பொருள் என தவறுதலாக நினைத்த சிறுவன், அதனையும் முழுங்கியுள்ளான். இது, உணவுக்குழாயில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குழந்தை மூர்ச்சையற்று, வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்ட உறவினர்கள், குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதுகுறித்து, குழந்தையின் தந்தை லஷ்மண ராவ் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.