ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா, தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து ஆலோசனை நடத்த இன்று (செவ்வாய் கிழமை) டெல்லி புறப்பட்டு சென்றார்.
ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 5 மணியுடன் அத்தொகுதியில் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினரும், சுயேட்சை வேட்பாளர்களும் கடைசிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அரசியல் கட்சிகள், மற்றும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா, தலைமை தேர்தல் ஆணையரை சந்திக்க டெல்லி புறப்பட்டார். ஆர்.கே.நகரில் பார்வையாளர்கள் நடத்திய ஆய்வு குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க அவர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகரில் அதிமுக, சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதாக திமுக சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ராவிடம் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தது. அப்போது, “சூழலை பொறுத்து ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்வதுகுறித்து ஆலோசிக்கப்படும்”, என கூறியிருந்தார்.
அதனால், ஓட்டுக்கு பணம் வழங்குவது குறித்த புகாரால் தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், அதுகுறித்தும் விக்ரம் பத்ரா தலைமை தேர்தல் ஆணையரிடம் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.