ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வரவுள்ளார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற ஜூலை மாதம் 17-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்தும், எதிர்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வரும் அவர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை சந்தித்து ஆதரவு கோருவார் என தெரிகிறது.
எதிர்கட்சிகள் சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர் மீராகுமாரும் தமிழகம் சென்று ஆதரவு கோருவேன் என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.