குஜராத் தேர்தலை முன்னிட்டு இருபது வருடங்களாக ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பிரதமர் நரேந்திர மோடியின் விளம்பர பிரச்சார செலவுகளை மக்கள் ஏன் சுமக்க வேண்டும் போன்ற கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் அவர் கடந்த 22 வருடங்களாக உள்ள செலவினை சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்.
“1995ல், குஜராத்திற்கு 9,183 கோடி கடன் இருந்தது. 2017ம் ஆண்டில் இது 2,41,000 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதாவது குஜராத்தில் வாழும் ஒவ்வொருவர் மீது ரூ 37,000 கடன் சுமத்தப்பட்டுள்ளது” என ராகுல் காந்தி ட்விட்டரில் சொல்லியுள்ளார்.
“உங்கள் தவறான நிதி நிர்வாகத்திற்கும், உங்கள் விளம்பரத்திற்கும் குஜராத் ஏன் கடன் படவேண்டும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் இது போன்ற கேள்விகளை கொண்டு ஹிந்தியில் ஒரு கவிதை எழுதி இருந்தார். அதில் குஜராத்தின் நிலைமையை கருத்தில் கொண்டு பல கேள்விகள் பாஜகவை நோக்கி இருந்தது.
2012ம் ஆண்டு 50 லட்ச வீடுகள் வழங்குவதாக அரசு வாக்குறுதி கொடுத்தது. ஆனால் அதில் 4.72 லட்சம் மட்டுமே இதுவரை கட்டப்பட்டுள்ளன. “இதை நிறைவேற்ற பிரதமர் அவர்களுக்கு இன்னும் 45 வருடம் ஆகுமா?” என அவர் கேட்டார்.
அதுமட்டும் இன்றி, குஜராத்தின் கிராமங்களை தொழிற்சாலைகளுக்கு கொடுத்ததை கண்டித்து பேசினார். “மோடி ஜி ரூ. 1.40 லட்ச கோடி கடனை தொழிலதிபர்களுக்கு தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அவரின் நிதி அமைச்சர் விவசாயிகளுக்கு கடனை தள்ளுப்படி செய்வது தவறு என தெரிவிக்கிறார்” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
குஜராத் தேர்தலை முன்னிட்டு, ராகுல் காந்தி பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இன்று முதல் ராகுல் காந்தி தனது நவ்சர்ஜன் யாத்திரையை துவங்குகிறார்.