ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், டிடிவி.தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்குவது குறித்து மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி தெரிவித்தார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர் இறந்ததையடுத்து, அந்த தொகுதி காலினதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அப்போது அதிமுக இரண்டு அணிகளாக பிளவுப்பட்டு நின்றது. ஓபிஎஸ் தலைமையிலான அணியின் வேட்பாளராக இ.மதுசூதணன் போட்டியிட்டார். அவருக்கு இரட்டை மின்விளக்கு சின்னம் வழங்கப்பட்டது. சசிகலா அணியின் சார்பாக டிடிவி.தினகரன் போட்டியிட்டார். அவருக்கு தொப்பி சின்னம் வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இப்போது அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் ஒருங்கிணைந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டுவிட்டது. சுயேட்சை சின்னமான தொப்பி சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியதை எதிர்த்து டெல்லி உயர் நீதி மன்றத்தில் டிடிவி.தினகரன் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு விசாரணையின் போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிடிவி.தினகரனுக்கு தொப்பி சின்னத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இன்று காலையிலும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர் நீதி மன்ற நீதிபதி இம்தர்மித் கவுர், மாலை 4 மணிக்கு தொப்பி சின்ன வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.