உத்தரபிரதேச மாநிலத்தில் கர்ப்பிணி பெண்ணை, காவல் துறையினர் தாக்கியதால் அப்பெண் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், பராபங்கி மாவட்டத்தில் காவல் துறையினர் போலி மதுபானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ருச்சி ராவத் (வயது 22) என்ற கர்ப்பிணி பெண்ணின் வீட்டில் போலீசார் தேடுதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், போலீசாரிடமிருந்து தப்பிக்க, போலி மதுபானங்களை அப்பெண் தன் வயிற்றுக்குள் மறைத்து வைத்திருப்பதாக சந்தேகித்து, அப்பெண்ணை காவல்துறையினர் தடியால் வயிற்றில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், அப்பெண் உயிரிழந்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதனிடையே, இந்த குற்றச்சாட்டை காவல் துறையினர் மறுத்துள்ளனர். ருச்சி ராவத்தின் குடும்பம் அடிக்கடி போலி மதுபானங்களை பதுக்கி வைப்பவர்கள் எனவும், அதனாலேயே அவர்கள் வீட்டில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். அப்போது, குடும்பத்தினர் அனைவரும் தப்பித்துவிட்ட நிலையில், கர்ப்பமாக இருந்ததால் அப்பெண்ணால் தப்பிக்க முடியவில்லை எனவும் விளக்கியுள்ளனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்துள்ள கிராம மக்கள், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது கொலை குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்