ஐ.ஆர்.சி.டி.சி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சேவைக்கட்டணம் செலுத்துவதற்கான விலக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பணயிகள் சேவைக்கட்டணம் செலுத்தாமலேயே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஐ.ஆர்.சி.டி.சி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யும் பயணிகளிடம் இருந்து சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
முன்னதாக, 2017 ஜூன் 30–ந் தேதிவரையும், 2017 செப்டம்பர் 30–ந் தேதி வரையிலும் சேவை கட்டண விலக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில், சேவை கட்டணத்திற்கு விலக்கு அளிக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
சேவை கட்டண விலக்கு காரணமாக, 2016 நவம்பர் 23-ம் தேதி முதல், 2017 பிப்ரவரி 28-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் ரயில்வேக்கு ரூ.184 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூத்த ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகார் ஒருவர் தெரிவிக்கும்போது: ஐ.ஆர்.சி.டி.வி இணையதளத்தில் 33 சதவீத வருவாய் இணையதள முன்பதிவு மூலமாகவே கிடைக்கிறது என்றார்.