பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வரும் 13-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவித்ததை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே மாற்றி நிர்ணயித்து வந்தன. இந்நிலையில், குறிப்பிட்ட சில நகரங்களில் அதன் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்படும் முறை அமலில் உள்ளது. இதனால், பெட்ரோல் விலை கடுமையாக உயர்வதாக, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசலை வீடுகளுக்கு கொண்டுசென்று நேரடியாக விநியோகிக்கும் திட்டத்தை துவங்க உள்ளதாக சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து, பெட்ரோல், டீசலை வீடுகளுக்கு கொண்டுசென்று நேரடியாக விநியோகிக்கும் திட்டம், பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி நிர்ணயிக்கும் முறைக்கு எதிர்ப்பு, டீலர் கமிஷனை உயர்த்தி தர வேண்டும், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வரும் 13-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர்.
அந்த போராட்டத்தில், நாடு முடுவதும் 54,000 பெட்ரோல் விற்பனையாளர்கள் கலந்துகொள்வார்கள் எனவும், அதன்பிறகும் மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிட்டால் வரும் 27-ஆம் தேதி கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தாங்கள் அறிவித்திருந்த போராட்டத்தை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர். வாபஸ் பெற்றுக்கொள்வதற்கான முழு விவரங்கள் வெளியாகவில்லை.