‘எனது மகன் நிறுவனத்தில் ஊழல் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் மீதுதான் அதிக ஊழல் புகார்கள்!’ என் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா! இவர் இயக்குனராக உள்ள நிறுவனத்தில் வர்த்தகம், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபிறகு 16,000 மடங்கு அதிகரித்திருப்பதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது. அதாவது, 2014-க்கு முன்பு நஷ்டத்தில் இயங்கிய ஜெய் ஷா-வின் நிறுவனம், கடந்த ஆண்டு மட்டும் 89 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்திருப்பதாக செய்தி வெளியானது. இந்தப் பிரச்னையை காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்ய ஆரம்பித்தது.
இது குறித்து இன்று அகமதாபாத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ‘ஊழல் என்ற கேள்விக்கே அதில் இடமில்லை’ என்றார் அமித்ஷா. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்ட காங்கிரஸின் கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.
தொடர்ந்து அமித்ஷா கூறுகையில், ‘காங்கிரஸ் ஏராளமான ஊழல் புகார்களை எதிர்கொண்டு வருகிறது. ஆனால் அந்தப் புகார்களுக்கு எதிராக ஒரு அவதூறு வழக்கைகூட அந்தக் கட்சி தொடர்ந்ததில்லை. ஆனால் எனது மகன் சட்டரீதியாக அந்தப் புகாரை கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.’ என்றார் அமித்ஷா.
ஜெய் ஷா மீது புகார் தெரிவித்த இணையதளம் மீது குஜராத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கும், 100 கோடி இழப்பீடு கேட்டு சிவில் வழக்கும் ஜெய் ஷா சார்பில் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.