எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு அடிப்படையிலேயே இடங்களை நிரப்ப வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிற்ப்பித்தது. இந்நிலையில், நீட் தேர்வின் அடிப்படையிலேயே கடந்தாண்டு மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நீட் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், மாநில பாடத்திட்டத்தையும் சேர்ப்பது குறித்து பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடந்தாண்டு பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே இந்தாண்டும் நீட் தேர்வு நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. விளக்கம் அளித்தது.
இந்நிலையில், எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே 6-ஆம் தேதி நடைபெறும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் கடந்தாண்டு பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றன. பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வில் தோல்வியுற்றதால் மருத்துவ கனவை இழந்த அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பிறகு, தமிழகத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு அதிகரித்தது.
இருப்பினும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்தாண்டும் நீட் தேர்வை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.