தன் காதலரை திருமணம் செய்துகொள்வதற்காக, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடியதாக, மிந்த்ரா எனும் மின்னணு வர்த்தக சேவை இணையத்தளத்தில் தலைமை செயல் அலுவலர் வீட்டின் பணிப்பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
’மிந்த்ரா’ எனும் மின்னணு வர்த்தக சேவை இணையத்தளத்தின் தலைமை செயல் அலுவலர் அனந்த் நாராயணன், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் லேவல் சாலையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி தன் குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றிருந்தபோது, வீட்டிலிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, காவல் துறையினர் விசாரணையில், அவரது வீட்டில் வேலை செய்யும் பவானி என்ற பணிப்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தான் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்ததை அப்பெண் ஒப்புக்கொண்டதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, பவானியை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுதொடர்பாக, காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தன் காதலர் மற்றும் அவர் நண்பர்களிடம் அளித்து எதிர்கால வாழ்க்கைக்கு பவானி திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்பெண்ணின் காதலர் சுரேஷ் என்பவரும் அதே வீட்டிலேயே கார் ஓட்டுநராக வேலை செய்தவர் என்பதும், அதன்பின் கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், பவானியும் சுரேஷூம் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், பவானி, சுரேஷூக்கு சுமார் 25 முறைக்கும் மேல் செல்பேசியில் தொடர்புகொண்டு பேசியதே காவல் துறையினருக்கு அவர் மீது சந்தேகம் வர காரணம். இந்நிலையில், தன் காதலர் சுரேஷை வரும் நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டு வெளிநாடு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால், சுரேஷ் அளித்த திட்டப்படி, போலி சாவி மூலம் வீட்டிலிருந்த தங்க, வைர நகைகளை திருடி சுரேஷிடம் பவானி கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.