உடல் உழைப்பை பயன்படுத்தி மேற்கொள்ளும் வேலைகளுக்கு பெண்கள் சரிவர மாட்டார்கள் என்ற நிலைமைதான் இன்றும் பரவலாக உள்ளது. அதனால் தான், விமானப்படல், கடல் படை, ராணுவம் உள்ளிட்ட சாகச துறைகளில் பெண்களை அதிகளவில் பணிக்கு எடுக்கும்போது, அத்தகைய செய்திகளை நாம் கொண்டாடுகிறோம். அப்படித்தான், இப்போதும் நாம் கொண்டாடுவதற்கு ஏற்றாற்போல் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது.
மும்பை தீயணைப்பு படையில் இந்தியாவிலேயே முதன்முறையாக 97 வீராங்கணைகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மும்பை தீயணைப்பு படையில் 18 பெண்கள் மட்டுமே இருந்தனர். இப்போது, மொத்தமாக 115 பெண்களாக எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது. மும்பை நகரத்தில் உள்ள 34 தீயணைப்பு நிலையங்களில் இவர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இந்த பெண்களில் பெரும்பாலானோர் மஹராஷ்டிராவின் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி செய்தி.
தற்போது இவர்கள் அனைவரும் வதாலாவில் பயிற்சி பெற்று வருகின்றனர். விரையில், 34 தீயணைப்பு நிலையங்களில் பணியில் அமர்த்தப்படுவர்.
இதுகுறித்து, தலைமை தீயணைப்பு துறை அதிகாரி ரஹாங்டே கூறியதாவது, “இவர்கள் தங்கள் பயிற்சியின் கடைசி கட்டத்தில் இருக்கின்றனர். அதன்பின், வெவ்வேறு இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்கள் எல்லோரிடமும் அதிக ஆர்வம் இருப்பதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கடுமையான பணிகளையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதை காணமுடிகிறது.”, என்றார்.