ராஜஸ்தானில் 8 வயதில் குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண், தற்போது கடும் போராட்டங்களுக்கு மத்தியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று எம்.பி.பி.எஸ். படிக்க இருக்கிறார்.
ராஜஸ்தானை சேர்ந்த 20 வயது பெண் ரூபா என்பவருக்கு 3-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிட்டனர். அப்போது அவருக்கு வெறும் 8 வயது மட்டுமே. அவருடைய கணவருக்கு வயது 12.
திருமணம் முடிந்தாலும் அப்படியே இருந்துவிடாமல் தனது படிப்பைத் தொடர்ந்தார், ரூபா. அதற்கு அவரது கணவரும், கணவரின் சகோதரர்களும் உறுதுணையாக இருந்தனர்.
குடும்ப வறுமை, இளம் வயதில் திருமணம் இவை எல்லாவற்றையும் பெரும் சிரமங்களுக்கிடையே கடந்து, 10 மற்றும் 12-ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்தார் ரூபா. இதன்பின், மேற்கொண்டு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு துளிர்விட்டது.
எந்தவித மருத்துவ உதவியும் இல்லாமல் ரூபாவின் மாமா இறந்ததைக் கண்டவுடன் அவருக்கு இந்த எண்ணம் தோன்றியது. அவருடைய இந்த லட்சியத்திகு கணவர் வீட்டாரும் துணைநின்றனர்.
நீட் தேர்விற்காக தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க துவங்கினார். அவரது வறுமை நிலையைக்கண்டு அந்த பயிற்சி மையமும் கல்விக்கட்டணத்தை 75% குறைத்தது. இதன்பின், கடந்த 2 ஆண்டுகளும் நீட் தேர்வெழுதினார். ஆனால், அதில் அவர் தோல்வியை தழுவினார். இருப்பினும் தொடர்ந்து முயற்சி இந்தாண்டும் நீட் தேர்வு எழுதினார். அதில், 603 மதிப்பெண்கள் பெற்று வெற்றி கண்டார். கூடிய விரைவில் மருத்துவக் கல்லூரியில் இணைந்து தன் கனவை நோக்கி அடுத்தகட்ட பயணத்திற்கு தயாராகிவிட்டார் ரூபா.