மும்பையில் மனைவி காலையில் சீக்கிரமாக எழவில்லை, உணவை ருசியாக சமைக்கவில்லை என்பதற்காக, விவாகரத்துக் கோரிய கணவரின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையை சேர்ந்த சாண்டக்ரூஸ் என்பவர் குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, அவரது மனைவி பணிக்கு செல்லும் பெண். ஆகையால், சமையல் வேலை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் செய்துகொண்டே வேலைக்கு செல்லும் நிலைமை அப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. தன் மனைவி ருசியாக உணவு சமைப்பதில்லை, வீட்டு வேலைகளை சரிவர செய்வதில்லை எனக்கூறி அவர் விவாகரத்து கோரியிருக்கிறார்.
மேலும், காலையில் சீக்கிரமாக எழுப்பினால் தன்னையும், தன் பெற்றோரையும் துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். வேலை முடித்து வீட்டுக்கு வந்தால் தண்ணீர் கூட தன் மனைவி தருவதில்லை என கூறியிருக்கிறார்.
ஆனால், அம்மனு தள்ளுபடி ஆனநிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் சாண்ட்க்ரூஸ். இம்மனு, வியாழக்கிழமை நீதிபதிகள் கே.கே.டாட்டேட், சாரங் கோத்வால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குறிப்பிட்ட காரணங்களின் கீழ் விவாகரத்து வழங்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.