டெல்லி மனேசர் பகுதியில் அமைந்துள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் புகுந்த சிறுத்தையொன்றை வனத்துறையினரும் காவல் துறையினரும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.
டெல்லி குர்கோவன் நகரில் உள்ள மனேசர் பகுதியில் அமைந்துள்ளது மாருதி சுசுகி தொழிற்சாலை. இந்த தொழிற்சாலையில் வியாழக்கிழமை காலையில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இதைக்கண்ட தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்து தொழிற்சாலையிலிருந்து வெளியேறினர். மேலும், வனத்துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தொழிற்சாலையில் அனைத்து வேலைகளையும் நிறுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். தொழிற்சாலையின் எஞ்சின் பகுதியில் தான் முதலில் கண்டறியப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சிறுத்தையை தற்போதுவரை பிடிக்கவில்லை. தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறுத்தையை கண்டறியும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
குர்கோவனில் இதுபோன்று விலங்குகள் மனிதர்களை எதிர்கொள்ளும் நிகழ்வுகள் தொடர்ந்த நடைபெற்ற வண்ணமிருக்கின்றன.